Total Pageviews

Thursday, 17 September 2015

சுவை

கொழுக்கட்டைத் தட்டை நீட்டி
அம்மா குடுத்துச்சு இந்தாங்க
எனச் சொல்லும் எல்லாக்
குழந்தைகளும் அவளைப்போலவே
தெரிகிறதெனக்கு..
ஆனால், நீ சாப்டு செல்லம் என்றவுடன் முதல் கடி தான் கடித்து மறுபாதியை ஊட்டிவிடும் இந்துக்குட்டியின் கொழுக்கட்டைச் சுவைதான் இப்போதைக்கில்லை..


Sunday, 13 September 2015

சாட்சி

ஒட்டுமொத்தப்
பிரியங்களின்
சாட்சியாக
அதோ இன்னும்
பறந்துகொண்டே
இருக்கிறது
ஒற்றைப் புறா
உயிர்விடவில்லை..
எப்பொழுதும்
போலவே இதுவும்
புரியாது உனக்கு..


Sunday, 30 August 2015

ஐந்தெழுத்துக்காரி

வேண்டுமென்றே கோவப்படுத்தியும்
கோவப்பட்டால் திணறத்திணறக்
கட்டியணைத்து
அன்பைப் பொழிந்தும்
ஆட்டிப்படைக்கிறாள்
இந்த 'ஐந்தெழுத்துக்காரி'..!


Wednesday, 26 August 2015

அழுத்தக்காரி..!

மகிழ்ச்சி துக்கமென அத்தனையையும்
என் மீதே தெளித்துப் பின்
நெஞ்சில் சாய்ந்து அழுத்திப்
பேசாத நேரங்களில் அடக்கிவைத்த
அவ்வளவையும் கண்ணீராகவே
பிழிந்துகொள்கிறாள்..
என் அழகான ஐந்தெழுத்துக்காரி..!


Wednesday, 19 August 2015

நீயும் நானும் ...

படம்: Google

அடித்து வீழ்த்திவிடத்
துடிக்கிறாய்..
சுற்றிலும் மோதிப்
பின் உன்னுடல் உரசிப்
புன்னகைக்கிறேன்..
மீண்டும் உதைத்துத்
தள்ளினாலும்
கைகோர்த்துக் குழிக்குள்
இழுக்கிறேன் உன்னையும்..
நிறத்தைத் தவிர
இன்னொரு ஒற்றுமையும்
உண்டு..
இந்தக் காதலில்
வீழ்தல் 'வெற்றி' யெனக்
கொள்ளப்படும்
இருவருக்கும்..!


என்னமோ ?

வெட்டவெளியில்
வெளிச்சமின்றி
எல்லைகளற்று
எப்பொழுதாவது
உனக்குமெனக்குமான
இடைவெளியில்
ஊர்ந்து செல்கிறது..
ஊரே அதைக்
'காதலெ'ன்கிறது.
நீ என்ன சொல்கிறாய்..?


Wednesday, 15 July 2015

தேவதைக் கதை

வழக்கம்போலவே இன்றும் ஒரு கதை கேட்கிறாள்..மறந்துவிட்ட கதைகளையெல்லாம் நினைவூட்டிப் பார்க்கிறேன்..குமுதத்திலும் குங்குமத்திலும் வெளிவந்த ஒருபக்கக் கதைகளை..சிறுவர்மலர் உட்பட ஒன்றும் நினைவிலில்லை.. ராணி காமிக்ஸில் வந்த மரியாதைராமனும் முல்லாவும் மட்டும் கொஞ்சம் நினைவிருக்கிறார்கள்..முடிவு நினைவிருக்கிறது..இடையிடையே  கதையில் பாதி நினைவைவிட்டுத் தப்பித்துத் தொலைந்துவிட்டது.. வேறு வழியில்லை.. மாறுகிறேன் நானே ..எழுத்தாளனாய் .. முன்பு கூட உனக்காகத்தான் கவிஞனாகவும் ஆகித் தொலைத்தேன் நினைவிருக்கிறதா ?
எப்படி மறப்பாய் ..
உன்னை அழவைப்பதற்கும் சொற்ப முத்தங்களுக்காகவும்தானே  பயன்படுத்தியிருக்கிறேன் அவற்றை..
மடியில் தலைவைக்கச் சொல்லி கதை சொல்லத் தொடங்குகிறேன்.
சிங்கம் வந்தது.மருள்கிறாள்.. கூடவே ஒரு முயல் உன்னைப்போல ..சிரிக்கிறாள் சின்னதாய்.. சிலநேரங்களில் நரிகள் வரும். எப்போதாவது ட்ராகன்களும் கூட வருவதுண்டு.. ட்ராகன் பார்த்ததே இல்லடா என்கிறாள்..மலைப்பாம்பையும் கடற்குதிரையையும் சேர்த்தது மாதிரி என்கிறேன்.. அவள் உருவகப்படுத்திக்கொண்டாள். நீங்களும் உங்கள் மனதில் ட்ராகன்களை அப்படியே மாற்றிக்கொள்ளுங்களேன். இல்லையெனில் நான் பொய்யென கோபம் கொள்வாள் .அவள் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் இக்கதையைச் சொல்வாளாம் . சொல்லிச் சிரிப்பாள்.
சில இரவுகளில் கதையில் திக்கித்திணறி எப்படிப் பயணிப்பது எனத் தெரியாமல் சிங்கங்களையும் மான்களையும் கூட ஒன்றாக ஓடவிடுவேன்.சிங்கம் மானை  சாப்ட்டுறாதா என அவள் கேட்கையில் தான் மான்களையெல்லாம் புலிகளாய் மாற்றிவிடுவேன்.மகிழ்ச்சியாய்க் கேட்டுக்கொண்டிருப்பாள்..சிங்கம் பசியோட இருக்கு என்றாலும் முயல வேட்டையாடப் போகுது என்றாலும் ஒரேமாதிரி 'உச்' கொட்டுவாள் ..
ஆனால் ரத்தம் தெறிக்கும் கதைகள் அவளுக்குப் பிடிப்பதேயில்லை..
பேய்க்கதைகள் சொல்லச் சொன்னாள்..ஊரிலுள்ள உரக்கேணி பற்றி ஒருமுறையும் வெள்ளையம்மா புளியமரத்தையும் பற்றிக் கதை சொல்லித்தொலைக்க அந்தப் பக்கம் போவதையே தவிர்த்துவிட்டாள்..
அதோடு அதையும் நிறுத்திக்கொண்டேன்..
தண்ணி நெறய குடி என்று சொன்னாலும் அதற்குள்ளும் ஒரு கதை கேட்பாள் .ராஜா கதை, தேவதை கதை,ஏழு மலை, ஏழுகடல் தாண்டிய சம்பவங்கள் ரொம்பவே பிடிக்குமென்பாள்..ஆனால் எனக்குத்தான் அது இன்னும் கைகூடவில்லை.. சிலநேரங்களில் அவளையே நாயகியாகவும், நான் நாயகனாகவும் எண்ணிக்கொண்டு கதை சொல்வதுண்டு.வேண்டுமென்றே அக்கதையில் கட்டிப்பிடிக்கும் காட்சிகள் வைத்துக் கமுக்கமாய்ச் சிரித்தாலும் கடைசிவரை கண்டுபிடிக்கவே தெரியாமல்தான் முழித்தபடி கேட்டுக்கொண்டிருப்பாள். பயந்துநடுங்கும்படி கதை சொன்னால் இறுக்கி அணைத்துக் கொள்வாள்.அதனாலேயே தேவையின்றியும் அந்தப்பயம் நீட்டிக்கப்படுவதுண்டு..சொல்லிக்கொண்டே இருக்கையில் பின்னாடி திரும்பி பாரு என்றால் கத்தி விடுவாள்.
சிரித்தால் கடித்து வைப்பாள்.
நீ ஒரு கதை சொல்லு என்றால் முயல் ஆமை கதை சொல்வாள் கைகளை ஆட்டியபடி..ஆனால் அவள் கதையில் முயல் மட்டுமே எப்போதும் ஜெயிக்கும்..
யானைக்கதைகளில் காது எவ்ளோ பெருசு என்பதுபோன்ற  குறுக்குக் கேள்விகளும் கேட்பாள்.
முன்புபோல சுட்டிக்கதைகள் படிக்க முடிவதில்லை.
நம்பர் நடிகை விநாயக சிவன் டைப்பான  கிசுகிசுக்கள் எல்லாம் அவளுக்குச் சுத்தமாய்ப் பிடிப்பதேயில்லை.
கர்ணன்,அர்ஜுனன் என ஆரம்பித்தால் கொட்டாவி விடத் தொடங்கிவிடுவாள்..
காக்கா நரிக்கதையை எத்தனைமுறை சொன்னாலும் திரும்பத் திரும்பக் கேட்பாள். பாட்டி பாவம்ல எனக் கிறுக்குத் தனமாய்க் கேள்வி கேட்பாள்.
பாட்டிகிட்ட வடையைத் திருப்பி குடுக்குற மாதிரி சீன் வைத்தால் குழந்தை போலவே கன்னத்தில் கைவைத்துக் கேட்டுக்கொண்டிருப்பாள்.
பேச்சுவாக்கில் ஒருமுறை நா செத்துப்போய்ட்டா யாருக்கிட்ட கத கேப்ப என்றவுடன் அழுதே விட்டாள்.
அது எனக்காகவா இல்லை கதைக்காகவா என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
இப்படித்தான் சிலநேரங்களில்
கதையைக் கடத்தத் தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கையிலே எண்ணம் புரிந்தோ என்னவோ அப்படியே தூங்கியும் போய் விடுகிறாள்.
அவளையே தேவதையாக்கி நான் ஒரு கதை கண்டுகொண்டிருக்கிறேன் அடுத்தமுறை சொல்வதற்கு..
இதோ..,வெள்ளை கவுனுடன் மடியில் படுத்திருக்கிறாள்...

Sunday, 7 June 2015

எது கவிதை டியர்..?

      வெளிநாட்டிலிருந்து தோழி ஒருத்தி அலைபேசுகிறாள். ஹலோ ..எப்டி இருக்க ? என்ன பிஸியாய்ட்டியா ? ரொம்ப நாளாச்சு.. என்கிறேன். அதெல்லாம் இல்லடா..நல்லா இருக்கேன். நீ நல்லா இருக்கியா ? ஊருல மழையெல்லாம் பெய்யுதாடா ?. ஒரு கவித ஒன்னு சொல்லுடா ப்ளீஸ் என்கிறாள். கவிதையா ? நடந்து போய்க்கிட்ருக்கேன். ஈவ்னிங் சொல்றேன் கண்டிப்பா என்கிறேன். வேணும்னா இப்ப இருக்க அட்மாஸ்பியர் சொல்லட்டா ? என்கிறேன். சரி சொல்லுடா என்கிறாள்.
        
           ஒரு தாத்தா அவரோட பேரன சைக்கிள்ல வச்சு ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறாரு . ரெண்டு கையையும் சீட்ல ரெண்டு பக்கமும் நல்லா பிடிச்சுக்க சொல்லிட்டு கையில ஒக்காந்துற கூடாதேனு பாத்துப்பாத்து இலேசா ஒக்காந்து பேசிட்டே ஓட்டிட்டுப் போறாரு. பேக் வெய்ட் பின்னாடி இழுக்குது .

           தண்ணி ஊத்துற சத்தம்.மாடு மூச்சா போகுது. டேய் லூசு எனச் சிரிக்கிறாள்.
அப்புறம்..
அந்த வீட்டு ஹோம் தியேட்டர்ல "இப்படியே எங்கவேணா தூக்கிகிட்டுப் போ..."னு சாங் ஓடுது.. விசாலும் ஸ்ருதியும் டூயட் பாடுறாங்க..
   
         ரெண்டுநாளக்கி முன்னாடி பேஞ்ச மழத்தண்ணி இன்னும் ரோட்டுக்கு நடுவுல பள்ளத்துல கெடக்கு. நம்மூரு ரோட்டப் பத்திதான் ஒனக்கே தெரியுமே..
கார் ஒன்னு போகுது. நல்லவேள வெலகிட்டேன்.இல்லனா தண்ணி தெறிச்சிருக்கும் .

        எட்டுமணியாகப் போகுது.இப்பதான் ஒருத்தரு பால் கறக்குறாரு. பெரிய கல்லு ஒன்னு மாட்டுக்கு முன்னாடி கட்டிருக்கு.அத நாக்கால நக்குது. கன்னுக்குட்டி செத்துப்போச்சு போல.
மறுமுனை அமைதியாய் இருக்கவே, ஏய்,.கேக்குறியா என்கிறேன். ம்ம்..கேக்கறேன்டா என்கிறாள்..

        நம்ம ஊர் ரோட்டோரம் புளியமரம் இருக்குல..நம்பர்லாம் போட்ருப்பாங்களே..அதுல ஏதோ குருவி கத்துற சத்தம்.அணில் ஒன்னு வேகமா மரத்த விட்டு எறங்கி ஓடுது.
அப்புறம் ...

டேய்..போதும் விக்னேஷ். இதுக்கு மேல என்ன கவிதை வேணும் ?..
I love u da stupid.how you carry on this type of centiments,emotions and bla bla ... with you ? dear. எனச்சொல்லி நிலைக்கதவில் சாய்ந்து கொள்கிறாள்.

(ஃபோனில் எப்படி கதவில் சாய்வது தெரியும் என அறிவுஜீவித்தனமாக நீ கேட்டால் did you are loved by anyone ? அன்புன்னா என்னனு தெரியுமா என ஆரம்பித்து மனசு,மண்ணு, ம**, ப்ளா ப்ளா ப்ளாவென பல பக்க வசனம் சொல்வேன் என எதிர்பார்க்கிறாயா நண்பா ? நோ..நெவர்.கொஞ்சம் தண்ணி குடி நண்பா என வேண்டுமானால் சொல்வேன்.)

நிலைக்கதவில் சாய்ந்து கொள்கிறாள்.
take care dear எனச்சொல்லி ஃபோனை வைக்கிறேன்.
யோசிக்கிறேன். still.....
எது கவிதை விக்னேஷ் ..??


எது கவிதை ..?

படம்:முகநூல்

பழநி சரவணபவன். மதிய உணவு சாப்பிடுவதற்காகப் போய் அமர்கிறேன்.பக்கவாட்டு வட்டமேசையில் இளம் தம்பதியர் சிறு குழந்தையுடன். அளவு சாப்பாடு வருகிறது.கூடவே ஒரு தட்டு முழுக்க வட்டக்கிண்ணங்களில் சாம்பார்,ரசம்,குருமா,மோர் என..
சாப்பிடத் தொடங்குகிறார்கள்.
        "சாம்பார்ல புகைவாசணை வருது" என்கிறாள் அந்தச்சகோதரி. "உன் சமையலுக்கு இது எம்புட்டோ பரவாயில்ல" எனச் சிரிக்கிறார் அவர். "வீட்டுக்கு வாங்க இருக்கு உங்களுக்கு.." எனச் செல்லமாய் அதட்டுகிறாள்.

       அய்யோ க்யூட் ....
கவிதை போல அவ்வளவு அழகு. சுற்றிலும் நிகழ்கவிதை நிகழ்கையில் கவிதை தேடி எங்கு அலைந்து கொண்டிருக்கிறாய் விக்னேஷ் ? என கேஷியரின் அருகில் உள்ள பொம்மை  கேட்பது எனக்கு மட்டும்தான் கேட்கிறதா ?


Tuesday, 26 May 2015

பேசாத பேச்செல்லாம்...

     வாழ்க்கை ஒருகட்டத்தில் இல்லையில்லை ஒரு புள்ளியில் சூன்யமாகிறது..அதுபோன்ற பல புள்ளிகளை இன்னும் சந்திக்கவேண்டி வரலாம்.திசைகள் மாறலாம்.தீர்வுகளும் ஏற்படலாம்.மேலைநாட்டுத் தத்துவங்களில் ஆகச்சிறந்ததாய் இதைச் சொல்வேன்.
"Only one thing is certain.that is, nothing is certain."ஆம். நிலையாமை ஒன்றே நிலையானது இவ்வுலகில் .
சூழல்களே முடிவுகளைத் தீர்மானிக்கின்றன.
     
            தாய், தந்தை, சகோதரிகள் மற்றும் அவள். அனைவரது அன்பு இவற்றைவிட கடவுள்,கோவில்,வழிபாடு,இவையெதுவும் பெரிதில்லை அல்லவா ? ஆம் எனில் நீயும் என் தோழனே. .

            நாத்திகம் என்பதென்ன ? கடவுள் நம்பிக்கைகளுக்கு எதிரானதல்ல. மூடநம்பிக்கைகளுக்கு எதிரானது.
கோவில்களுக்குச் செல்வேன். விழுந்தும் வணங்குவேன் . திருநீறும் இட்டுக்கொள்வேன். ஏனெனில் என்னைச் சார்ந்தோரின் நம்பிக்கை அது. அதீத நம்பிக்கை ,இந்த அன்புதான் சிவமெனில் நாத்திகன் ஏன் வேல்தாங்கக் கூடாது.? ஏன் மொட்டையடிக்கக் கூடாது ? ஏன் அலகுகுத்திக் கொள்ளக் கூடாது ?

            சிவத்தை விடவும் அன்புதான் பெரிதென்று அதன்பால் கட்டுண்ட முழு மனிதன் எவனோ அவனே 'நாத்திகன்' என்பேன். அன்பே சிவம். அதீத அன்பும் நம்பிக்கையும். அதுதானே கடவுள்!

          இழப்புகளும் இயற்கைதானே ..! ஆனால் இந்த இழப்புகளின் அளவைப் பொறுத்து அதன் தாக்கம் இருக்கத்தானே செய்யும்.அவளின் குரல் கூடவே இல்லையெனில் ,
பிரிதொன்றால் நிரப்பவியலா வெற்றிடம் ஒன்றுண்டு எனக்குள்..

கவிதை, கடவுள், கருமம், மயிரு, மட்டை எதுவுமின்றி
சுயநலமிக்க கிறுக்கனாய் மொட்டைத்தலை விக்னேஷ் பாப்பா .


Thursday, 16 April 2015

உதிரும் இதழ்கள்

படம்: முகநூல்

சற்று முன்னரே
பிறந்த என்னிடம்
முதல் சொல்லைக்
கேட்டிட முயல்கிறீர்கள் ..
முரண்டு பிடிக்கிறேன்
பேச மனமின்றி..
செவிகளைத் திறந்து
சுற்றிலும் பேசும்
ஓசைகளை சப்தமின்றிக்
கேட்கிறேன்..
சுகமாய்த்தான் இருக்கிறது..
பேச எத்தனிக்கையில்
இருள் சூழ்கிறது ..
இதில் எனக்கு விருப்பமில்லை..
காதுகளை அடைத்து
குரல் எழுப்புமாறு
கூவுகிறீர்கள் ..
காலால் உதைத்து
வாய்திறக்க மறுக்கிறேன் ..
உளி கொண்டு
உச்சந்தலையில் அடித்து
உரக்கப் பேசச்
சொல்கிறீர்கள் ..
'மௌனம் என் மொழி'யென
முதல் இதழ் உதிர்க்கின்றேன்..
அடுத்த இதழை உதிர்க்க
அவசியமற்றுப் போகிறது...



Posted via Blogaway


கவிதையொன்று உதிர்கிறதே...

படம்:முகநூல்



ஒரு பார்வை
ஒரு தலையாட்டல்
ஒரு ஆச்சரியம்
ஒரு புருவம் உயர்த்தல்
ஒரு கண்சிமிட்டல்
ஒரு புன்னகை
ஒரு மகிழ்ச்சி
ஒரு உதட்டுச் சுழிப்பு
ஒரு மௌனம்
ஒரு வார்த்தை
ஒரு முத்தம்
ஒரு மழலை
ஒரு விரலசைவு
ஒரு கைகோர்ப்பு
ஒரு தலைகோதுதல்
ஒரு அரவணைப்பு
ஒரு தவிப்பு
ஒரு ஏக்கம்
ஒரு பாசம்
ஒரு பரிவு
ஒரு சீண்டல்
ஒரு சண்டை
ஒரு சிணுங்கல்
ஒரு அழுகை
ஒரு சமாதானம்
ஒரு வெளிச்சம்
ஒரு இருள்
ஒரு நிலவு
ஒரு மழை
ஒரு மலர்
ஒரு மரம்
ஒரு தனிமை
ஒரு நேசம்
ஒரு உணர்வு
ஒரு தேநீர்
ஒரு பேருந்து
ஒரு பயணம்
ஒரு குறுஞ்செய்தி
ஒரு வாசணை
ஒரு இரவு
ஒரு கனவு
ஒரு நாள்
ஒரு மாலை
ஒரு தூக்கம்
ஒரு அழைப்பு
ஒரு ஹலோ
ஒரு நிழல்
ஒரு பள்ளி
ஒரு நினைவு
ஒரு அதட்டல்
ஒரு காத்திருப்பு
ஒரு கையசைத்தல்
ஒரு அச்சம்
ஒரு ஜன்னல்
ஒரு கதவோரம்
ஒரு மாடிப்படி
ஒரு வெட்கம்
ஒரு 'ப்போ'
ஒரு சாக்லேட்
ஒரு சாத்துக்குடி ஜூஸ்
ஒரு புகைப்படம்
ஒரு தழுவல்
ஒரு கண்ணீர்
ஒரு விசும்பல்
ஒரு நடை
ஒரு காற்று
ஒரு வானம்
ஒரு பரிசு
ஒரு எச்சில்
ஒரு சிரிப்பு
ஒரு நீ
ஒரு நான்
ஒரு பேரன்பு
இன்னும் எத்தனை
'ஒரு'க்கள் இந்த
ஒரு காதலில்..
ஒவ்வொன்றும்
ஒரு கவிதையல்லவா ?
உன் தலையிலிருந்து
உதிரும்
ஒரு மல்லிப்பூவும்
ஒரு கவிதையொன்றை
உதிர்த்திடுமே ...



Posted via Blogaway


Wednesday, 15 April 2015

ஒரு துளி வலி..!

ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும்
ஒரு துளிக்குள் அடங்கிப்போகும் .

அது வறண்ட நிலத்தில்
விழுந்த முதல் சொட்டு
மழையாக இருக்கலாம் .

கன்றுக்குட்டி முட்டிக்
குடிக்கும் தாய்ப்பசுவின்
மடியில் சுரந்த
சீம்பாலாய் இருக்கலாம் .

காலையில் நடக்கையிலே
சாலையோரப் புல்லில்
தகதகத்து சூரியனையும்
ஒளித்துவைக்கும் சிறு
பனித்துளியாய் இருக்கலாம் .

அந்த நேரத்து அமைதியைக்
கலைக்கும் வண்ணம்
குழாயில் 'க்ளுக்'கெனச்
சொட்டும் ஒருதுளித்
தண்ணீராய் இருக்கலாம் .

குழந்தைகளைத் தூக்கிக்
கொஞ்சுகையில் சிந்தும்
எச்சிலாய் இருக்கலாம் .

அன்புக்குரியோரின்
வெறித்த பார்வையை
விலக்க எண்ணி
விரலால் தொட்டு முகத்தில்
தெளித்த குளிர்பானமாய்
இருக்கலாம் .

உழைத்துக் களைத்து
வீடு வந்த கணவனின்
முகம் நோக்கி மனைவி
புடவைத் தலைப்பால்
அழுத்தத் துடைந்த
அந்த ஒருதுளி
வியர்வையாய் இருக்கலாம் .

அந்த ஒரு துளி
இப்படி அழகாய்த்தான்
இருக்கவேண்டும்
என்பதில்லை .

மாதவிடாய் வலியின் ஊடே
சப்தமின்றிக் கதறும்
பெண்ணின் உடையில் சிந்தும்
உதிரமாகவும் இருக்கலாம் .

அந்த ஒரு துளி...

பாலின்றிப் பசியில் அழுது
தாய்முலை தேடும் குழந்தை
அதைப்பெற்ற ஏழைத்தாய்
வேதனையுடன் அழச்சக்தியற்று
விசும்ப அதில் கரைந்த
கடைசிச் சொட்டுக்
கண்ணீராய்க் கூட
இருக்கலாம் ..





Tuesday, 14 April 2015

காதல் என்பதொரு காவிய முரண்



இங்கே நிழலான நினைவுகள்
வண்ணங்களால் மின்னும்..
நிஜங்கள் கறுப்புவெள்ளைத்
திரையாய்க் கடக்கும்..

மனங்கள் சிறைப்பட்டுக் கிடக்கும்..
எனினும் மனங்கொள்ளாச்  சுதந்திரக்
காற்று சுவாசிக்கக் கிடைக்கும்..

வார்த்தைகள் ஆயிரம் உரையாடும்.
இறுதியில் அந்த
மௌனமொழி தலைதூக்கும்..

முட்டல்களும் மோதல்களும்
முறையாய்த் தொடங்கினாலும்
முத்தங்களால் முற்றுப்பெறும்..

இல்லாக் காற்றும் மிதக்கவைக்கும்..
நின்றபின் கூட மழையது
நனைய வைக்கும்..

தேய்பிறையில் கூட வளரும்
காதலுக்கு உவமைகூறும் நிலா..
கண்கள் விழிதிறந்தே
கனவு காணும்..

சுற்றிலும் வெயிலடிக்கும்..
உள்ளுக்குள்ளே உவகை
மழை பெய்யும்..

மார்கழியில் கோடைவரும்..
பங்குனியில் பனிவிழும்..

முரண்கள் தமிழுக்கு மட்டுமா அழகு?

"எதுவும் வேண்டாம்.
எப்பவும் நீ கூடவே இரு.."

காதலென்பது இதைப்போல
காவிய முரணல்லவா..?



Posted via Blogaway


கடவுளும் ஒரு கோப்பைத் தேநீரும்..

மத்தியான வெயில்..சுள்ளென்று அடிக்கிறது.சற்றுமுன் குடித்த சர்பத் வாடை நன்னாரியும் எழுமிச்சையுமாய் தொண்டைக்கு நடுவில் தேங்கி நிற்கிறது.வாட்டர் பாக்கெட் ஒன்றை வாங்கி கொஞ்சமாய் குடித்து மெட்ரோ வாட்டரினால் ஏற்பட்ட முகச்சுழிப்புடன் தண்ணீரைப் பீய்ச்சி முகத்தில் அடித்து அந்தச் சூரியனை வென்ற புன்னகையோடு நிமிர அந்தத் தண்ணீரோ தோல்வியை ஒப்புக்கொள்வதுபோல் கீழ்நோக்கி வழிந்தோடுகிறது.
அதை எண்ணி வெட்கத்தால் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு கர்ச்சீப் எடுத்து முகம் மறைத்துத் துடைக்க ஒன்றுமில்லாமல் அடங்குகிறது நீர். மேற்கொண்டு நடக்க வெயில் கொஞ்சம் மட்டுப்பட்டால் பரவாயில்லை என நினைத்துக்கொண்டே நகர அந்தக் கதிரவன் காது கொடுத்துக் கேட்டதோ என்னவோ தலைதாழ்த்திப் பின்வாங்க நான் முன்னேறினேன். எதிரே டீக்கடை.ஏனோ நிற்க வேண்டும்போல் இருந்தது.வெயில் மண்டையைப் பிளக்கையிலும் கூட தேநீர் அருந்துவதென்பது சுகமானதாய்த்தான் இருக்கிறது.இப்போது குடிக்க மனமில்லையெனினும் வெறும் பிஸ்கட்டோடு அந்தக் கடையைக் கடக்கப் பிரியமில்லை. பதினைந்து வயதிருக்கும் அந்தச் சிறுவனுக்கு..குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவில்லை என வழக்கமாக எல்லாக் கடைகளிலும் காணப்படும் அந்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் அந்தக் கடையிலும் இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழி இல்லையெனில் இதில் தவறேதும் இல்லையெனவே கருதுவேன். வாழ்வதற்கு வழியை உண்டாக்காமல் வெற்றுச் சம்பிரதாயமாக ஸ்டிக்கர் ஒட்டுதல் ஒன்றும் பெரிதாய்க் கிழித்துவிடப் போவதில்லை.  யாரிடம் முறையிடுவது ? கடைக்கு வெளியே ஒருவர் கலைந்த கேசம், கசங்கிய துணிகள்,முகத்தை முழுதாய் மறைக்குமளவு தாடியுடன் இவையனைத்திற்கும் நேர்மாறாய் ஏதோ தெளிவான சிந்தனையுடன் சற்றுமுன்பே ஏதோ நாட்டு அதிபரைச் சந்தித்து தேநீர் அருந்திய அதே திருப்தியுடன் கனிந்த பார்வையுமாய் .. இருந்தாலும் அருகே போய் அவர் முதுகில் தொட்டு ஒரு தேநீர் டம்ளரை நீட்டி நம்நாட்டின் அவலங்களையும் அநிநாயங்களையும் சொல்லி அவர் பதிலுக்குக் காத்திருந்தேன்.புரியாதது போலவே முகத்தை வைத்துக்கொண்டு மேலேயும் கீழேயுமாய் என்னைப் பார்க்க அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பி யாரெனக் கேட்டேன்.
தலையை உயர்த்திக் 'கடவுள்' என்றார்.
பைத்தியக்காரன்கிட்ட என்ன தம்பி பேசிக்கிட்டு இருக்கீங்க எனக்குரல் கேட்டு திரும்பி மறுபடி திரும்புவதற்குள் அந்தக் 'கடவுள்' எதிர்ச்சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தார்.டம்ளர் கல்லில் அமர்ந்திருந்தது. வெயில் திரும்ப சுடுவது போல இருந்தது.
மண்டை கணக்க மறுபடி நடந்தேன் அடுத்த தேநீர்க்கடை நோக்கி...

Friday, 3 April 2015

உறக்கத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் ..!



தூக்கம் வராத இந்தப் பின்னிரவில்
அமர்ந்து எதையோ தட்டச்சுகிறேன்.
தூக்கம் தொலைந்ததற்குக் காரணம்
பசியாய் இருக்கலாம்.அல்லது
உண்டது செரிக்காமல் இருக்கலாம்.
யாரையோ நினைத்துக் கொண்டிருக்கலாம்.
அது யாராகவும் இருக்கலாம்.
உதாசீனப் படுத்தப் பட்டிருக்கலாம்.
ஏதோ புரியாத மொழிப்படத்தை
பார்த்த குழப்பமாயிருக்கலாம்.

பங்குனி வெயிலின் தாக்கமாக
இருக்கலாம்.ஏன்? கொசுத்தொல்லையாகக்கூட
இருக்கலாம்.மாலையில் போட்ட
குட்டித்தூக்கம் தான் காரணமென
நான் சொன்னால் மட்டுமே உனக்குத்
தெரிந்திடப் போகிறது.எனினும்,
அறையில் அனைவரும் உறங்க
இருட்டிய வெளிச்சத்தில் ..

(இது உங்களுக்கு முரணாகத் தோன்றலாம்.
எப்படி எடுத்துக்கொண்டாலும் இந்த
நள்ளிரவில் அதைப்பற்றி நினைக்க
வெல்லாம் நேரமில்லை.இருட்டிலும்
எனக்கு மட்டுமே தெரியும் வெளிச்சம்
என வைத்துக்கொள்ளலாமே ..
இது நம் கண்களின் சிறப்புத்தன்மை.
வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் நாம்
நுழையும்போது இருட்டாகக் கண்கள் தெரியாத
நிலை ஏற்படும்.இருட்டு பழகிய பிறகு
இண்டிகேட்டர் வெளிச்சம் கூட தூக்கத்தைக்
கெடுக்கும் அசாத்தியத் திறமை
கொண்டது.
ஐயோ..இதெல்லாம் ரொம்ப முக்கியமா ?)

எங்கவிட்டோம் ?
ஆங்..இருட்டிய வெளிச்சத்தில் காலாற
குறுக்கும் நெடுக்குமாய் நடந்து
அறையின் பரப்பளவையும் மூலைவிட்டத்தையும்
அலைந்து அளந்து கொண்டிருத்தல்
எத்தனை சுகம்?
சோகம் எனக் கருதினால் அது சோகமே ..!
இப்போதுதான் எல்லா எண்ண ஓட்டங்களும்
வந்து போகும். அன்றைய நினைவின்
நீட்சியாகப் பலவற்றை நம் மனம்
அசைபோடும்.

பயணங்களும் பாடங்களும் கண்முன்னே
வந்துபோகும். இரயிலிலும் பேருந்திலும்
செல்வது மட்டுமே பயணத்தில் சேருமா என்ன ?
மூன்றாவது மாடியிலிருந்து தரைக்கு
படிக்கட்டுகளின் வழியே மெதுவாய்
இறங்கி ஒவ்வொரு தளத்திற்குமிடையே
நீண்ட பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டு
கைப்பிடிகளின் உதவியின்றி தரைத்தளம்
அடைவதும் எதிரே பார்த்த முகங்களும்
எப்பொழுதாவது அவசரமாகப்
படியிறங்கையில் எதிரே வருவோர் மீது
மோதிப் புன்னகைத்து சாரி..! எனக்
கடந்து செல்லுதலும் கடைசிப்படியில்
கால் நழுவித் தடுமாறி கட்டைச்
சுவரைப் பிடித்தூன்றி நின்று
தலையைச் சிலுப்புவதுமாய்
ஆயிரம் நினைவுகள் ஒவ்வொரு
படியிறங்களிலும்..

இப்போது சொல்லுங்கள்..
இதைப் பயணம் எனக்கூறுதல் தவறா ?
அத்தனையையும் கடந்த அன்றையநாள்
அந்தக்கருமம் எல்லாம் இப்போதுதான்
வந்து தொலைக்குமா ? என நாம்
கருதினால் மட்டும் நினைவுகளை
அழித்திட முடியுமா என்ன?

இருங்க ..தண்ணி குடிச்சுக்கிறேன்.

ம்ம்..நினைவலைகளின் சுமைகளுடன்
உறங்கிப்போவதை விட உங்கள்
தூக்கத்தைக் கெடுத்து யோசிக்க
வைத்த திருப்தியுடன் தூங்குவேன்.
இது மனிதர்களின் குரூர புத்தியா ?
அது உண்மையெனில் நான்மட்டும்
அதில் எப்படி விதிவிலக்காவேன்..?
இன்னும் கொஞ்சநேரம் மொக்க போடலாம்தான்.
ஆனாலும், அந்தக்காற்று என்னை அடித்துத்
துரத்தி கட்டிலில் படுக்கவைத்துத்தான்
ஓய்வேன் என சபதமேற்கொண்டிருந்தால்
நான் என்ன செய்ய..?

உறக்கத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்.
உறக்கம் மறுபடி வெல்லும்..!

தூங்குற நேரத்துல இதெல்லாம் ரொம்பத்
தேவையா ?

ஆஆஆஆவ்....
குட் நைட்.



Posted via Blogaway