Total Pageviews

Tuesday, 14 April 2015

காதல் என்பதொரு காவிய முரண்



இங்கே நிழலான நினைவுகள்
வண்ணங்களால் மின்னும்..
நிஜங்கள் கறுப்புவெள்ளைத்
திரையாய்க் கடக்கும்..

மனங்கள் சிறைப்பட்டுக் கிடக்கும்..
எனினும் மனங்கொள்ளாச்  சுதந்திரக்
காற்று சுவாசிக்கக் கிடைக்கும்..

வார்த்தைகள் ஆயிரம் உரையாடும்.
இறுதியில் அந்த
மௌனமொழி தலைதூக்கும்..

முட்டல்களும் மோதல்களும்
முறையாய்த் தொடங்கினாலும்
முத்தங்களால் முற்றுப்பெறும்..

இல்லாக் காற்றும் மிதக்கவைக்கும்..
நின்றபின் கூட மழையது
நனைய வைக்கும்..

தேய்பிறையில் கூட வளரும்
காதலுக்கு உவமைகூறும் நிலா..
கண்கள் விழிதிறந்தே
கனவு காணும்..

சுற்றிலும் வெயிலடிக்கும்..
உள்ளுக்குள்ளே உவகை
மழை பெய்யும்..

மார்கழியில் கோடைவரும்..
பங்குனியில் பனிவிழும்..

முரண்கள் தமிழுக்கு மட்டுமா அழகு?

"எதுவும் வேண்டாம்.
எப்பவும் நீ கூடவே இரு.."

காதலென்பது இதைப்போல
காவிய முரணல்லவா..?



Posted via Blogaway


No comments:

Post a Comment