படம்: முகநூல்
சற்று முன்னரே
பிறந்த என்னிடம்
முதல் சொல்லைக்
கேட்டிட முயல்கிறீர்கள் ..
முரண்டு பிடிக்கிறேன்
பேச மனமின்றி..
செவிகளைத் திறந்து
சுற்றிலும் பேசும்
ஓசைகளை சப்தமின்றிக்
கேட்கிறேன்..
சுகமாய்த்தான் இருக்கிறது..
பேச எத்தனிக்கையில்
இருள் சூழ்கிறது ..
இதில் எனக்கு விருப்பமில்லை..
காதுகளை அடைத்து
குரல் எழுப்புமாறு
கூவுகிறீர்கள் ..
காலால் உதைத்து
வாய்திறக்க மறுக்கிறேன் ..
உளி கொண்டு
உச்சந்தலையில் அடித்து
உரக்கப் பேசச்
சொல்கிறீர்கள் ..
'மௌனம் என் மொழி'யென
முதல் இதழ் உதிர்க்கின்றேன்..
அடுத்த இதழை உதிர்க்க
அவசியமற்றுப் போகிறது...
Posted via Blogaway
Total Pageviews
Thursday, 16 April 2015
உதிரும் இதழ்கள்
கவிதையொன்று உதிர்கிறதே...

ஒரு பார்வை
ஒரு தலையாட்டல்
ஒரு ஆச்சரியம்
ஒரு புருவம் உயர்த்தல்
ஒரு கண்சிமிட்டல்
ஒரு புன்னகை
ஒரு மகிழ்ச்சி
ஒரு உதட்டுச் சுழிப்பு
ஒரு மௌனம்
ஒரு வார்த்தை
ஒரு முத்தம்
ஒரு மழலை
ஒரு விரலசைவு
ஒரு கைகோர்ப்பு
ஒரு தலைகோதுதல்
ஒரு அரவணைப்பு
ஒரு தவிப்பு
ஒரு ஏக்கம்
ஒரு பாசம்
ஒரு பரிவு
ஒரு சீண்டல்
ஒரு சண்டை
ஒரு சிணுங்கல்
ஒரு அழுகை
ஒரு சமாதானம்
ஒரு வெளிச்சம்
ஒரு இருள்
ஒரு நிலவு
ஒரு மழை
ஒரு மலர்
ஒரு மரம்
ஒரு தனிமை
ஒரு நேசம்
ஒரு உணர்வு
ஒரு தேநீர்
ஒரு பேருந்து
ஒரு பயணம்
ஒரு குறுஞ்செய்தி
ஒரு வாசணை
ஒரு இரவு
ஒரு கனவு
ஒரு நாள்
ஒரு மாலை
ஒரு தூக்கம்
ஒரு அழைப்பு
ஒரு ஹலோ
ஒரு நிழல்
ஒரு பள்ளி
ஒரு நினைவு
ஒரு அதட்டல்
ஒரு காத்திருப்பு
ஒரு கையசைத்தல்
ஒரு அச்சம்
ஒரு ஜன்னல்
ஒரு கதவோரம்
ஒரு மாடிப்படி
ஒரு வெட்கம்
ஒரு 'ப்போ'
ஒரு சாக்லேட்
ஒரு சாத்துக்குடி ஜூஸ்
ஒரு புகைப்படம்
ஒரு தழுவல்
ஒரு கண்ணீர்
ஒரு விசும்பல்
ஒரு நடை
ஒரு காற்று
ஒரு வானம்
ஒரு பரிசு
ஒரு எச்சில்
ஒரு சிரிப்பு
ஒரு நீ
ஒரு நான்
ஒரு பேரன்பு
இன்னும் எத்தனை
'ஒரு'க்கள் இந்த
ஒரு காதலில்..
ஒவ்வொன்றும்
ஒரு கவிதையல்லவா ?
உன் தலையிலிருந்து
உதிரும்
ஒரு மல்லிப்பூவும்
ஒரு கவிதையொன்றை
உதிர்த்திடுமே ...
Posted via Blogaway
Wednesday, 15 April 2015
ஒரு துளி வலி..!
ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும்
ஒரு துளிக்குள் அடங்கிப்போகும் .
அது வறண்ட நிலத்தில்
விழுந்த முதல் சொட்டு
மழையாக இருக்கலாம் .
கன்றுக்குட்டி முட்டிக்
குடிக்கும் தாய்ப்பசுவின்
மடியில் சுரந்த
சீம்பாலாய் இருக்கலாம் .
காலையில் நடக்கையிலே
சாலையோரப் புல்லில்
தகதகத்து சூரியனையும்
ஒளித்துவைக்கும் சிறு
பனித்துளியாய் இருக்கலாம் .
அந்த நேரத்து அமைதியைக்
கலைக்கும் வண்ணம்
குழாயில் 'க்ளுக்'கெனச்
சொட்டும் ஒருதுளித்
தண்ணீராய் இருக்கலாம் .
குழந்தைகளைத் தூக்கிக்
கொஞ்சுகையில் சிந்தும்
எச்சிலாய் இருக்கலாம் .
அன்புக்குரியோரின்
வெறித்த பார்வையை
விலக்க எண்ணி
விரலால் தொட்டு முகத்தில்
தெளித்த குளிர்பானமாய்
இருக்கலாம் .
உழைத்துக் களைத்து
வீடு வந்த கணவனின்
முகம் நோக்கி மனைவி
புடவைத் தலைப்பால்
அழுத்தத் துடைந்த
அந்த ஒருதுளி
வியர்வையாய் இருக்கலாம் .
அந்த ஒரு துளி
இப்படி அழகாய்த்தான்
இருக்கவேண்டும்
என்பதில்லை .
மாதவிடாய் வலியின் ஊடே
சப்தமின்றிக் கதறும்
பெண்ணின் உடையில் சிந்தும்
உதிரமாகவும் இருக்கலாம் .
அந்த ஒரு துளி...
பாலின்றிப் பசியில் அழுது
தாய்முலை தேடும் குழந்தை
அதைப்பெற்ற ஏழைத்தாய்
வேதனையுடன் அழச்சக்தியற்று
விசும்ப அதில் கரைந்த
கடைசிச் சொட்டுக்
கண்ணீராய்க் கூட
இருக்கலாம் ..
Tuesday, 14 April 2015
காதல் என்பதொரு காவிய முரண்
இங்கே நிழலான நினைவுகள்
வண்ணங்களால் மின்னும்..
நிஜங்கள் கறுப்புவெள்ளைத்
திரையாய்க் கடக்கும்..
மனங்கள் சிறைப்பட்டுக் கிடக்கும்..
எனினும் மனங்கொள்ளாச் சுதந்திரக்
காற்று சுவாசிக்கக் கிடைக்கும்..
வார்த்தைகள் ஆயிரம் உரையாடும்.
இறுதியில் அந்த
மௌனமொழி தலைதூக்கும்..
முட்டல்களும் மோதல்களும்
முறையாய்த் தொடங்கினாலும்
முத்தங்களால் முற்றுப்பெறும்..
இல்லாக் காற்றும் மிதக்கவைக்கும்..
நின்றபின் கூட மழையது
நனைய வைக்கும்..
தேய்பிறையில் கூட வளரும்
காதலுக்கு உவமைகூறும் நிலா..
கண்கள் விழிதிறந்தே
கனவு காணும்..
சுற்றிலும் வெயிலடிக்கும்..
உள்ளுக்குள்ளே உவகை
மழை பெய்யும்..
மார்கழியில் கோடைவரும்..
பங்குனியில் பனிவிழும்..
முரண்கள் தமிழுக்கு மட்டுமா அழகு?
"எதுவும் வேண்டாம்.
எப்பவும் நீ கூடவே இரு.."
காதலென்பது இதைப்போல
காவிய முரணல்லவா..?
Posted via Blogaway
கடவுளும் ஒரு கோப்பைத் தேநீரும்..
அதை எண்ணி வெட்கத்தால் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு கர்ச்சீப் எடுத்து முகம் மறைத்துத் துடைக்க ஒன்றுமில்லாமல் அடங்குகிறது நீர். மேற்கொண்டு நடக்க வெயில் கொஞ்சம் மட்டுப்பட்டால் பரவாயில்லை என நினைத்துக்கொண்டே நகர அந்தக் கதிரவன் காது கொடுத்துக் கேட்டதோ என்னவோ தலைதாழ்த்திப் பின்வாங்க நான் முன்னேறினேன். எதிரே டீக்கடை.ஏனோ நிற்க வேண்டும்போல் இருந்தது.வெயில் மண்டையைப் பிளக்கையிலும் கூட தேநீர் அருந்துவதென்பது சுகமானதாய்த்தான் இருக்கிறது.இப்போது குடிக்க மனமில்லையெனினும் வெறும் பிஸ்கட்டோடு அந்தக் கடையைக் கடக்கப் பிரியமில்லை. பதினைந்து வயதிருக்கும் அந்தச் சிறுவனுக்கு..குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவில்லை என வழக்கமாக எல்லாக் கடைகளிலும் காணப்படும் அந்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் அந்தக் கடையிலும் இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழி இல்லையெனில் இதில் தவறேதும் இல்லையெனவே கருதுவேன். வாழ்வதற்கு வழியை உண்டாக்காமல் வெற்றுச் சம்பிரதாயமாக ஸ்டிக்கர் ஒட்டுதல் ஒன்றும் பெரிதாய்க் கிழித்துவிடப் போவதில்லை. யாரிடம் முறையிடுவது ? கடைக்கு வெளியே ஒருவர் கலைந்த கேசம், கசங்கிய துணிகள்,முகத்தை முழுதாய் மறைக்குமளவு தாடியுடன் இவையனைத்திற்கும் நேர்மாறாய் ஏதோ தெளிவான சிந்தனையுடன் சற்றுமுன்பே ஏதோ நாட்டு அதிபரைச் சந்தித்து தேநீர் அருந்திய அதே திருப்தியுடன் கனிந்த பார்வையுமாய் .. இருந்தாலும் அருகே போய் அவர் முதுகில் தொட்டு ஒரு தேநீர் டம்ளரை நீட்டி நம்நாட்டின் அவலங்களையும் அநிநாயங்களையும் சொல்லி அவர் பதிலுக்குக் காத்திருந்தேன்.புரியாதது போலவே முகத்தை வைத்துக்கொண்டு மேலேயும் கீழேயுமாய் என்னைப் பார்க்க அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பி யாரெனக் கேட்டேன்.
தலையை உயர்த்திக் 'கடவுள்' என்றார்.
பைத்தியக்காரன்கிட்ட என்ன தம்பி பேசிக்கிட்டு இருக்கீங்க எனக்குரல் கேட்டு திரும்பி மறுபடி திரும்புவதற்குள் அந்தக் 'கடவுள்' எதிர்ச்சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தார்.டம்ளர் கல்லில் அமர்ந்திருந்தது. வெயில் திரும்ப சுடுவது போல இருந்தது.
மண்டை கணக்க மறுபடி நடந்தேன் அடுத்த தேநீர்க்கடை நோக்கி...
Friday, 3 April 2015
உறக்கத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் ..!
தூக்கம் வராத இந்தப் பின்னிரவில்
அமர்ந்து எதையோ தட்டச்சுகிறேன்.
தூக்கம் தொலைந்ததற்குக் காரணம்
பசியாய் இருக்கலாம்.அல்லது
உண்டது செரிக்காமல் இருக்கலாம்.
யாரையோ நினைத்துக் கொண்டிருக்கலாம்.
அது யாராகவும் இருக்கலாம்.
உதாசீனப் படுத்தப் பட்டிருக்கலாம்.
ஏதோ புரியாத மொழிப்படத்தை
பார்த்த குழப்பமாயிருக்கலாம்.
பங்குனி வெயிலின் தாக்கமாக
இருக்கலாம்.ஏன்? கொசுத்தொல்லையாகக்கூட
இருக்கலாம்.மாலையில் போட்ட
குட்டித்தூக்கம் தான் காரணமென
நான் சொன்னால் மட்டுமே உனக்குத்
தெரிந்திடப் போகிறது.எனினும்,
அறையில் அனைவரும் உறங்க
இருட்டிய வெளிச்சத்தில் ..
(இது உங்களுக்கு முரணாகத் தோன்றலாம்.
எப்படி எடுத்துக்கொண்டாலும் இந்த
நள்ளிரவில் அதைப்பற்றி நினைக்க
வெல்லாம் நேரமில்லை.இருட்டிலும்
எனக்கு மட்டுமே தெரியும் வெளிச்சம்
என வைத்துக்கொள்ளலாமே ..
இது நம் கண்களின் சிறப்புத்தன்மை.
வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் நாம்
நுழையும்போது இருட்டாகக் கண்கள் தெரியாத
நிலை ஏற்படும்.இருட்டு பழகிய பிறகு
இண்டிகேட்டர் வெளிச்சம் கூட தூக்கத்தைக்
கெடுக்கும் அசாத்தியத் திறமை
கொண்டது.
ஐயோ..இதெல்லாம் ரொம்ப முக்கியமா ?)
எங்கவிட்டோம் ?
ஆங்..இருட்டிய வெளிச்சத்தில் காலாற
குறுக்கும் நெடுக்குமாய் நடந்து
அறையின் பரப்பளவையும் மூலைவிட்டத்தையும்
அலைந்து அளந்து கொண்டிருத்தல்
எத்தனை சுகம்?
சோகம் எனக் கருதினால் அது சோகமே ..!
இப்போதுதான் எல்லா எண்ண ஓட்டங்களும்
வந்து போகும். அன்றைய நினைவின்
நீட்சியாகப் பலவற்றை நம் மனம்
அசைபோடும்.
பயணங்களும் பாடங்களும் கண்முன்னே
வந்துபோகும். இரயிலிலும் பேருந்திலும்
செல்வது மட்டுமே பயணத்தில் சேருமா என்ன ?
மூன்றாவது மாடியிலிருந்து தரைக்கு
படிக்கட்டுகளின் வழியே மெதுவாய்
இறங்கி ஒவ்வொரு தளத்திற்குமிடையே
நீண்ட பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டு
கைப்பிடிகளின் உதவியின்றி தரைத்தளம்
அடைவதும் எதிரே பார்த்த முகங்களும்
எப்பொழுதாவது அவசரமாகப்
படியிறங்கையில் எதிரே வருவோர் மீது
மோதிப் புன்னகைத்து சாரி..! எனக்
கடந்து செல்லுதலும் கடைசிப்படியில்
கால் நழுவித் தடுமாறி கட்டைச்
சுவரைப் பிடித்தூன்றி நின்று
தலையைச் சிலுப்புவதுமாய்
ஆயிரம் நினைவுகள் ஒவ்வொரு
படியிறங்களிலும்..
இப்போது சொல்லுங்கள்..
இதைப் பயணம் எனக்கூறுதல் தவறா ?
அத்தனையையும் கடந்த அன்றையநாள்
அந்தக்கருமம் எல்லாம் இப்போதுதான்
வந்து தொலைக்குமா ? என நாம்
கருதினால் மட்டும் நினைவுகளை
அழித்திட முடியுமா என்ன?
இருங்க ..தண்ணி குடிச்சுக்கிறேன்.
ம்ம்..நினைவலைகளின் சுமைகளுடன்
உறங்கிப்போவதை விட உங்கள்
தூக்கத்தைக் கெடுத்து யோசிக்க
வைத்த திருப்தியுடன் தூங்குவேன்.
இது மனிதர்களின் குரூர புத்தியா ?
அது உண்மையெனில் நான்மட்டும்
அதில் எப்படி விதிவிலக்காவேன்..?
இன்னும் கொஞ்சநேரம் மொக்க போடலாம்தான்.
ஆனாலும், அந்தக்காற்று என்னை அடித்துத்
துரத்தி கட்டிலில் படுக்கவைத்துத்தான்
ஓய்வேன் என சபதமேற்கொண்டிருந்தால்
நான் என்ன செய்ய..?
உறக்கத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்.
உறக்கம் மறுபடி வெல்லும்..!
தூங்குற நேரத்துல இதெல்லாம் ரொம்பத்
தேவையா ?
ஆஆஆஆவ்....
குட் நைட்.
Posted via Blogaway