தூக்கம் வராத இந்தப் பின்னிரவில்
அமர்ந்து எதையோ தட்டச்சுகிறேன்.
தூக்கம் தொலைந்ததற்குக் காரணம்
பசியாய் இருக்கலாம்.அல்லது
உண்டது செரிக்காமல் இருக்கலாம்.
யாரையோ நினைத்துக் கொண்டிருக்கலாம்.
அது யாராகவும் இருக்கலாம்.
உதாசீனப் படுத்தப் பட்டிருக்கலாம்.
ஏதோ புரியாத மொழிப்படத்தை
பார்த்த குழப்பமாயிருக்கலாம்.
பங்குனி வெயிலின் தாக்கமாக
இருக்கலாம்.ஏன்? கொசுத்தொல்லையாகக்கூட
இருக்கலாம்.மாலையில் போட்ட
குட்டித்தூக்கம் தான் காரணமென
நான் சொன்னால் மட்டுமே உனக்குத்
தெரிந்திடப் போகிறது.எனினும்,
அறையில் அனைவரும் உறங்க
இருட்டிய வெளிச்சத்தில் ..
(இது உங்களுக்கு முரணாகத் தோன்றலாம்.
எப்படி எடுத்துக்கொண்டாலும் இந்த
நள்ளிரவில் அதைப்பற்றி நினைக்க
வெல்லாம் நேரமில்லை.இருட்டிலும்
எனக்கு மட்டுமே தெரியும் வெளிச்சம்
என வைத்துக்கொள்ளலாமே ..
இது நம் கண்களின் சிறப்புத்தன்மை.
வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் நாம்
நுழையும்போது இருட்டாகக் கண்கள் தெரியாத
நிலை ஏற்படும்.இருட்டு பழகிய பிறகு
இண்டிகேட்டர் வெளிச்சம் கூட தூக்கத்தைக்
கெடுக்கும் அசாத்தியத் திறமை
கொண்டது.
ஐயோ..இதெல்லாம் ரொம்ப முக்கியமா ?)
எங்கவிட்டோம் ?
ஆங்..இருட்டிய வெளிச்சத்தில் காலாற
குறுக்கும் நெடுக்குமாய் நடந்து
அறையின் பரப்பளவையும் மூலைவிட்டத்தையும்
அலைந்து அளந்து கொண்டிருத்தல்
எத்தனை சுகம்?
சோகம் எனக் கருதினால் அது சோகமே ..!
இப்போதுதான் எல்லா எண்ண ஓட்டங்களும்
வந்து போகும். அன்றைய நினைவின்
நீட்சியாகப் பலவற்றை நம் மனம்
அசைபோடும்.
பயணங்களும் பாடங்களும் கண்முன்னே
வந்துபோகும். இரயிலிலும் பேருந்திலும்
செல்வது மட்டுமே பயணத்தில் சேருமா என்ன ?
மூன்றாவது மாடியிலிருந்து தரைக்கு
படிக்கட்டுகளின் வழியே மெதுவாய்
இறங்கி ஒவ்வொரு தளத்திற்குமிடையே
நீண்ட பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டு
கைப்பிடிகளின் உதவியின்றி தரைத்தளம்
அடைவதும் எதிரே பார்த்த முகங்களும்
எப்பொழுதாவது அவசரமாகப்
படியிறங்கையில் எதிரே வருவோர் மீது
மோதிப் புன்னகைத்து சாரி..! எனக்
கடந்து செல்லுதலும் கடைசிப்படியில்
கால் நழுவித் தடுமாறி கட்டைச்
சுவரைப் பிடித்தூன்றி நின்று
தலையைச் சிலுப்புவதுமாய்
ஆயிரம் நினைவுகள் ஒவ்வொரு
படியிறங்களிலும்..
இப்போது சொல்லுங்கள்..
இதைப் பயணம் எனக்கூறுதல் தவறா ?
அத்தனையையும் கடந்த அன்றையநாள்
அந்தக்கருமம் எல்லாம் இப்போதுதான்
வந்து தொலைக்குமா ? என நாம்
கருதினால் மட்டும் நினைவுகளை
அழித்திட முடியுமா என்ன?
இருங்க ..தண்ணி குடிச்சுக்கிறேன்.
ம்ம்..நினைவலைகளின் சுமைகளுடன்
உறங்கிப்போவதை விட உங்கள்
தூக்கத்தைக் கெடுத்து யோசிக்க
வைத்த திருப்தியுடன் தூங்குவேன்.
இது மனிதர்களின் குரூர புத்தியா ?
அது உண்மையெனில் நான்மட்டும்
அதில் எப்படி விதிவிலக்காவேன்..?
இன்னும் கொஞ்சநேரம் மொக்க போடலாம்தான்.
ஆனாலும், அந்தக்காற்று என்னை அடித்துத்
துரத்தி கட்டிலில் படுக்கவைத்துத்தான்
ஓய்வேன் என சபதமேற்கொண்டிருந்தால்
நான் என்ன செய்ய..?
உறக்கத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்.
உறக்கம் மறுபடி வெல்லும்..!
தூங்குற நேரத்துல இதெல்லாம் ரொம்பத்
தேவையா ?
ஆஆஆஆவ்....
குட் நைட்.
Posted via Blogaway
Total Pageviews
Friday, 3 April 2015
உறக்கத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் ..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment