"இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?" - பதில் காண முயல்வோம்.
Where is my snacks box mom ?
நிற்க! விழிக்கிறீர்களா? நீங்கள் வாசிக்கப் போவது தமிழ்க்கட்டுரையே தான். மேற்காணும் ஆங்கிலச் சொற்றொடர் எனது சகோதரியின் மகன் அன்றாடம் பள்ளிக்குக் கிளம்புகையில் உபயோகிப்பது. ஆனால், முதலாம் வகுப்பு படிக்கும் அவனுக்கு இன்னும் தன்பெயரைத் தமிழில் எழுதத்தெரியாதாம். ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப இதுபோல இன்று எத்தனை குழந்தைகள் தமிழகத்தில் இருக்கிறார்களோ தெரியவில்லை. அவர்களுக்கெல்லாம் தமிழ் மொழியின் அவசியத்தை உணர்த்தக் கிடைத்த வாய்ப்பாக இதைக் கருதுகிறேன். நம் மொழியின் வளர்ச்சிக்கான முன்னேற்பாடுகளைக் கூறுவதற்கு முன்பு இன்றைய தலைமுறைப் பிள்ளைகள் நம் தாய்மொழியின் சிறப்புகளை அறிந்து கொள்வது அவர்களுள் சிறிதளவேனும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். எனவே, தாய்த்தமிழ் மொழியின் சிறப்புகள் வானளாவக் கிடந்தாலும் ஒரு சிறு முன்னோட்டம்.
தமிழ்மொழியின் தோற்றமும் வரலாறும் :
" கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி "
தமிழ் மொழியின் பழமையும் தொன்மையும் உலகறிந்ததே! திராவிட மொழிகளிலெல்லாம் தலைசிறந்தது எனப் போற்றப்படும் பெருமை வாய்ந்தது. மொழியின் தோற்றத்திற்கான ஆதாரம் மிகச்சரியாகத் தெரியவில்லையெனினும் பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானது என நிறுவுவதற்கான ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. தமிழ் இலக்கியங்களில் தலைசிறந்ததாகப் போற்றப்படும் திருக்குறள் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டது எனக் கருதப்படுவதால் ஆக, அதற்கு முன்பிருந்தே தமிழ் இலக்கியங்கள் இயற்றப்பட்டு வந்திருக்கலாம். இயற்கை அழிவுகளின் காரணமாக எண்ணற்ற படைப்புகள் அழிந்துபோனது. எனினும் மிச்சமிருக்கும் நூல்களே மொழியின் பெருமையை உரக்கச் சொல்லும். திருவள்ளுவர் நம் தமிழில் இயற்றிய திருக்குறள் உலகின் முப்பத்தியேழுக்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படுவதிலிருந்தே அதன் சிறப்பை நாம் புரிந்துகொள்ளலாம்.
தமிழர்களின் சிறப்பு :
அரசியல் சார்ந்த பல விடயங்களில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதில்லை என இந்தச் சமகாலத்திலும் கூட கேள்வியெழும் சூழல் நிலவுகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பெண்களுக்கு கல்வியும் சரிவரக் கிடைப்பதில்லை என வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தொடக்கத்திலேயே பெண்பாற் புலவர்கள் ஆண்களுக்கு சரிநிகர் சளைத்தவர்களல்ல என தத்தம் பாடல்களால் நிறுவியுள்ளனர். ஔவையார்,காக்கைப்பாடினியார், காரைக்கால் அம்மையார் என மிகப்பிரபலமான பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர்.
ஔவையார் திருக்குறளைப் பற்றி ஒற்றைவரியில் இப்படிச் சொல்லியிருக்கிறார். “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திக் குறுகத்தரித்த குறள் “ என்று. இதில் உற்றுநோக்க வேண்டியது அணுவைப் பற்றி ஆராய்ந்ததே ஆயிரத்தி எண்ணூறுகளுக்குப் பிறகுதான். இரண்டாம் உலகப்போரில் தான் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டன. அதுமட்டுமின்றி அக்காலங்களிலேயே வானவியல், கணிதம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கிய பலரும் தமிழர்களே! கணிதப்புலமையில் சிறந்து விளங்கிய ராமானுசர் வாழ்ந்ததும் இதே தமிழகத்தில்தான். இன்றும் கூட அனைவரும் வியந்து போற்றிடும் விந்தையான எண்கணிதங்களும் சூத்திரங்களும் அன்னார் படைத்ததுதான். விஞ்ஞானம் மெல்ல மெல்ல எட்டிக்கொண்டிருக்கும் பல விடயங்களை அன்றே பழமொழிகளின் வாயிலாகவும் பாடல்களாகவும் எளிதாய்ச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். நாம் செய்ததெல்லாம் அந்த உண்மைகளைத் திரித்துப் பொருள் மாற்றி தவறாக உபயோகித்துக் கொண்டிருப்பது தான்.
மொழியின் அவசியம் :
மொழி என்பது உணர்வுகளை எடுத்துச்செல்கிற அல்லது உணர்த்தக்கூடிய கருவி என்பதையும் கடந்து மனிதர்களின் சமூகக் காரணிகளில் முக்கியப் பங்கு பெற்றதாகிறது. கலாச்சாரம், பண்பாடு, பொழுதுபோக்கு, தொன்மை என எல்லாவற்றையும் பிரதிபலிப்பதாகவே இருந்து வருகிறது. மொழியானது ஒலி வடிவத்தில் பேசுவதற்கு மட்டும் பயன்படுமாறு அல்லாமல் அதைச்சார்ந்த இலக்கியங்களின் வளர்ச்சிக்கும் துணை நிற்கிறது. ஆக, மனிதர்களின் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப மொழியும் வளமை பெற்று தன்னிறைவு பெறல் வேண்டும். காலமாற்றத்தில் சிதைவுறுவதாய் இருந்துவிடக் கூடாது.
இடைக்காலத் தமிழ் வளர்ச்சி :
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழின் பரிணாம வளர்ச்சி என எடுத்துக்கொண்டால் சங்ககாலம் தொடங்கி இன்றைய சமகாலம் வரை பல நிலைகளைக் கடந்து வந்துள்ளது. கபிலர், இளங்கோவடிகள் போன்ற புலவர்கள் வாழ்ந்த கி.பி இரண்டு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தும் எட்டாம் நூற்றாண்டுகளில் வளர்ச்சியடைந்த பக்திப் பாடல்களும் பின்னர் அரசர்களைப் பற்றிய இலக்கியங்களுமாய் காலத்திற்கேற்ப மொழியும் இலக்கியங்களும் மாறிக்கொண்டே சிறப்பாய்த் தம்பணி செய்துள்ளன. இதற்கு இடைப்பட்ட காலங்களில் வெளிநாட்டிலிருந்து இங்கே வந்த பலரும் கூட தமிழ் கற்று உரைநடை இலக்கியங்களெல்லாம் கூட எழுதியிருக்கின்றனர்.
இருபதாம் நூற்றாண்டில் இவற்றிற்கெல்லாம் மாற்றாக சுதந்திர வேட்கைப் பாடல்களும் இயற்கை குறித்த வர்ணனைப் பாடல்களும் அதிகளவில் இயற்றப்பட்டன. பாரதியார் சுதந்திரப்புரட்சிக்கு வித்தாக பல பாடல்களை இயற்றினார். பின் வந்த பாரதிதாசன் போன்றோர் திறம்படக் கையாண்ட யுத்திகள் மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றன.
நம் மொழிச்சிதைவின் தொடக்கம் :
மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பாலும் ஆங்கில மொழியின் செல்வாக்காலும் நசிவடைந்து கிடந்தன தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும். பின்னர் அச்சு இந்திரங்களின் வருகையும் நிலையான ஆங்கிலேயர் ஆட்சியும் அதன்பின் ஏற்பட்ட சுதந்திர இந்திய ஆட்சியும் மதச்சுதந்திரமும், கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற வளர்ச்சி நவீன சிந்தனைகளின் உருவாக்கமும் போன்ற காரணிகளால் தமிழ் மொழியும் இலக்கியமும் இக்காலக்கட்டத்தில் பெரிதும் வளர்ச்சியுற்றன. இக்காலக்கட்டத்தில் இடம்பெற்ற முக்கிய மாற்றமாகக் குறிப்பிடப்பட வேண்டியன
சங்க இலக்கியங்கள் மீளக் கண்டுபிடிக்கப்பட்டதும் அச்சேற்றியதும்.
உரைநடையில் எழுதுவது அறிமுகமானது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதுக்கவிதை எனும் புதுப்பாணி தோற்றம் பெற்றது.
பின்னர் இலக்கியங்கள் மாற்றத்திற்கேற்ப சிறுகதை இலக்கியங்களாகவும் புதினங்களாகவும் வளர்ச்சியடைந்தது. புதுமைப்பித்தன், கல்கி, மு.வரதராசனார் , ம.பொ.சி, மு.கருணாநிதி என எண்ணிலடங்காதோர் எழுதிக் குவித்தனர். பிற்காலத் தமிழ் புரிந்துகொள்ள எளிதாய் உருமாறி பெரும்பாலானோர் எழுதத் தொடங்க நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலைநாட்டுக் கருத்துக்களும் பரவ ஆரம்பித்தன. தமிழ் எனும் தனித்தமிழ் மொழி சிறிதாக பிறமொழிக் கலப்புப்பெற்றது. அதில் ஏற்படும் நயம் பெரும்பாலானோராலும் விருப்பமானதாய் ஏற்றுக்கொள்ளப்பட அது இன்னும் வளர்ந்தது.
சிறுகதை இலக்கியம் வரவேற்பு பெறத் தொடங்க அதன் வடிவமும் மாறி ரசனைக்கேற்ப பிறமொழிக் கலப்பு அதிகளவில் ஏற்பட்டது. பேச்சுவழக்கில் எழுத்துநடை பரவ ஆரம்பித்தது. சிறுகதைகள் உணர்வுகளை எளிதாய்க் கடத்தக் கூடியதாக இருந்தபடியால் மாற்றங்களைத் தவிர்க்க முடியவில்லை. இலக்கியங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சிறுகதைகள் வாசகர்களால் பச்சைக்கம்பள வரவேற்பைப் பெற்றன.
இன்றைய தாய்மொழியின் நிலை :
எது எப்படியாகினும், தமிழ்மொழி மக்களின் வாழ்வில் பெரும்பாண்மையான இடத்தை ஆக்கிரமித்திருக்கிறது என்று உறுதிபடக் கூறலாம். நம் தாய்மொழியைப் போற்றும் விதமாய் பிள்ளைகளுக்கு தமிழ் என்று பெயர் சூட்டுகிறார்கள். மற்ற எல்லா மொழிகளை விடவும் இங்கே அதிகமானோர் எழுதிக்குவிக்கிறார்கள். வாசகர்களும் இருக்கிறார்கள். இது சாதாரணமானது அல்ல. தொழில்நுட்பங்கள் வளர்ந்து மக்களின் கலைசார்ந்த மற்றும் பொழுதுபோக்குக்கான தேடல்கள் வெகுவாகக் குறைந்திருக்கும் இச்சூழலிலும் கூட எழுத்துக்கள் வரவேற்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதற்குக் காரணம் நம் பாரம்பரியம். இலக்கியங்கள் நம் வாழ்வோடு கலந்தே இருக்கின்றன. புத்தகங்கள் இதுவரை அனைவராலும் விரும்பப்பட்டே வந்திருக்கிறது. இதெல்லாம் ஒருபுறமிருக்க தமிழர்களின் இன்னொருபக்கம் அதாவது பெரும்பான்மையானோரின் முகம் இதற்கு எதிரான மனநிலை உடையது.
அறியாமையால் பொருள் சிதைவு :
தமிழின் சிறப்புகளாக இன்றும் அழியாமல் பாமரர்களின் இலக்கிய வடிவமாக உள்ள பழமொழிகளை விருப்பம்போல் திரித்து பொருள்மாற்றி உண்மையான விளக்கத்துக்கு எதிரானதாக்கிப் பயன்படுத்துகிறோம். இது நிச்சயமாக தவிர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டியது.
“ ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் “ என்று பழமொழி ஒன்று சொல்லப்படுகிறது. இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்.
“நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.” இதில் வரும் சொல் சூடு அல்ல சுவடு. சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது. ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும் என்ற கருத்தை எதிரானதாக்கி உபயோகிக்கிறோம்.
“அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை புடிப்பான்.” எனச் சொல்லப்படும் பழமொழியின் உண்மையான பொருள் அர்ப்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான் என்பதாகும். வள்ளல் ஆனவரை கஞ்சனாக மாற்றி விட்டோம் காலப்போக்கில்.
நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.
தமிழர்கள் தம் தாய்மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் :
“கற்றது தமிழ்” என்றொரு திரைப்படம் தமிழ் இலக்கியம் படித்து வாழவே பாடுபடும் ஒரு இளைஞனின் கதையை நேர்மையாக எடுத்துச் சொல்லியிருக்கும். விளிம்புநிலை மக்களில் ஒருவன் இலக்கியத்தின் மீதும் தாய்மொழியின் மீதுமுள்ள பற்றினால் அதையே பாடமாய் எடுத்துப் படிக்க பின்னர் வேலை கிடைக்காமல் நடைபாதையில் கைக்குட்டை விற்கும் சூழல் காட்டப்படும். தமிழ் படித்த ஒரே காரணத்திற்காக அவன் ஒதுக்கிவைக்கப் படுகிறான். சமூகத்தில் வேடிக்கையாக்கப்பட்டு கேள்வி கேட்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறான். இதுதான் தற்போது தாய்மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம். வேலைவாய்ப்புகள் கூட தரப்படுவதில்லை.
வாசிக்கும் ஆர்வம் அனைத்து பரப்புகளிலும் வெகுவாகக் குறைந்திருக்கிறது என்பதே உண்மை. தாய்மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்கள் வெகுவானோரால் விரும்பப்படுவதில்லை. ஆங்கிலம் பெரிதாய் இந்த விடயத்தில் பங்காற்றியிருக்கிறது. ஆங்கிலத்தின் மீதான மோகம் அதிகரிக்கத் துவங்க சிறிதுசிறிதாக நம் பல்லாயிரமாண்டு பெருமைவாய்ந்த மொழி அழிவைச் சந்திக்கத் தொடங்குகிறது.
பாரதி “ மெல்லத் தமிழினிச் சாகும்” என சொன்னது எவ்வளவு உண்மை? புத்தகங்கள் முன்போல அதிகளவில் விரும்பி வாசிக்கப்படுவதில்லை. பிரபலமான எழுத்தாளர்களின் புத்தகங்கள் கூட ஆயிரம் பிரதிகள் விற்கப்படாத சூழல் நிலவுகிறது. மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தாலும் வளர்ந்துவரும் நாடுகளின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையிலும் நம் சமூகமும் மாற்றங்கண்டு வருகிறது. வாசித்தல் போன்றவையெல்லாம் தேவையில்லாததாகக் கருதப்படுகிறது. குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தாமல் மின்னணு விளையாட்டுகளுக்குப் பழக்கி வாசித்தலில் ஒரு மோசமான எதிர்காலத்தை ஏற்படுத்தி வருகிறோம். தமிழ்வழியில் படித்தலும் கூட சமூகத்தில் ஏளனமாய்ப் பார்க்கப்படும் சூழல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆங்கில வழியில் கல்வி கற்கும் பலரும் தாய்மொழியான தமிழை ஒரு பாடமாய்க் கூட எடுத்துப் படிக்க முன்வருவதில்லை. இந்தி உள்ளிட்ட வடமொழிப் பாடங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
உண்மையில் பார்த்தால் ஆங்கிலமே தெரியாமல் அறிவியலும், கணிதமும், தத்துவமும், தாய்மொழியில் கற்று அந்தந்தத் துறைகளில் வெற்றி கண்டவர்கள் எராளம் பேர். ஆனால், தமிழ்நாட்டில் தாய்மொழியில் இவற்றைப் பயில்வது கேவலம் என்று பொதுப்புத்தியில் வளர்க்கப்பட்டுள்ளது. தாய்மொழி வழிக்கற்றலின் மூலம்தான் புதிய கண்டுபிடிப்புகள் எளிதாக சாத்தியப்படும். புதிய கருவிகளை, இயந்திரங்களை உருவாக்கம் செய்து உலகோடு போட்டியிட இயலும்.
ஆங்கில மோகமும் தமிழின் அழிவும் :
தமிழ் வழி கற்றல் என்பது அதிக அளவில் ஆதரவு பெறாமல் இருக்க முக்கியமான காரணம் தமிழ் வழியில் படித்தால் நல்ல வேலை கிடைக்காது என்ற கருத்து பரவலாக இருப்பதே ஆகும். கல்வியானது ஆரோக்கியமான மனிதனை உருவாக்கும் என்பதை விட நல்ல சம்பளத்திற்கான வழி என்ற நம்பிக்கை பலப்படுத்தப்பட்டுவிட்டது இன்று. அதிலும் ஆங்கில வழிக் கல்வியே சிறந்த ஊதியத்தைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை. மேலும், தமிழ் வழியாக கல்வியின் பல்வேறு புலங்களை படிக்க இயலாது, அதற்கான சாத்தியப்பாடுகளும் இல்லை என்ற நிலையும் மற்றுமொரு காரணமாகும்.
இன்று தமிழ் வழிக் கல்வி என்பது அரசு பள்ளிகளில் மட்டும் காணப்படுகிறது. அங்கே பெரும்பாலும் ஏழை எளியோரே பயில்கின்றனர். அவர்களும் வேறு வழியில்லை என்பதற்காக தமிழில் பயிலும் நிலை. தமிழ் வழிக் கல்வி என்பது வெறும் மொழிப் பிரச்னை அல்ல. அது சமூக நீதி குறித்தப் பிரச்னை. அரசுப் பள்ளிகளின் அடிப்படை சமூக நீதியாகும். அதை மெதுவாக புறம்தள்ளும் வகையில் ஆங்கிலப் பள்ளிகள் எண்ணிக்கையில் பெருகி வருகின்றன. அரசும் ஆங்கில வழி வகுப்புகளை நாளும் புதிது புதிதாகத் தொடங்கி வருகிறது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வி முடித்த ஒருவன் தன் தாய்மொழியில் பிழையின்றி எழுதவும் படிக்கவும் இயலாதிருப்பது எவ்வளவு வெட்கக்கேடானது ? இந்த நிலைக்கு அரசுகள் ஒரு காரணம் என்றபோதும் முழுமுதற் காரணம் பெற்றோர்களே. சிறுவயதிலேயே தமிழில் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தாமல் ஆங்கிலத்தில் பேசுவதையே பெருமையாகக் கருதி ஊக்குவிப்பதால் வந்த வினை. பின்னாட்களில் அதுவே பூதாகரமாகி தமிழ் அவர்களிடம் அடியோடு தடைப்பட்டுப் போகிறது. அந்தப் பிள்ளைகளும் வளர்ந்து அவர்களது குழந்தைகளிடம் தமிழ் வளர்ச்சி எப்படி இருக்கும் என யூகித்துப் பாருங்கள்.
நாம் தற்போது மிகப்பரவலாய்ப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு முறை மொழியைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. குறுஞ்செய்திகள் *தங்கிலீஷ் (வேறு தமிழ்ச் சொல்லில் குறிப்பிடுவது அவ்வளவு சிறப்பாக இருக்காது.) என்ற பெயரில் தமிழ்ச்சொற்களை ஆங்கில எழுத்துக்களால் குறிப்பிடுகிறோம்.
இப்படித்தான் எந்த முன்னேற்பாடும் இ்ன்றி தமிழ்மொழி சீராக தன் பொழிவை இழந்து கொண்டிருக்கிறது.
தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டியன :
ஒருவர் தன் தேவைக்கேற்ப, வசதிக்கேற்ப எத்தனை மொழிகளை வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம். இது அவரவர் திறனும் விருப்பமும் சார்ந்ததே. அதற்காக தமது சொந்த மொழியை, தாய்மொழியை புறக்கணிப்பதும் தாழ்வாகக் கருதுவதும் அநாகரிகமானது. ஒரு மொழி அதன் சொந்த மக்களால் புறக்கணிக்கப்படும்போது வேர் அறுபட்ட கொடியினைப் போல சிறிது காலம் பச்சையாகத் தெரிந்துவிட்டு, பின் பட்டுப் போய்விடும் அபாயம் நிகழ வாய்ப்பிருக்கிறது.
பிறமொழியில் சரளமாகப் பேசுவதை, எழுதுவதை கௌரவமாக, பெருமையாகக் கருதும் நாம், நம் தாய்மொழியை சரிவர கற்றுக் கொள்ளாது இருப்பதற்காக வெட்கப்படுவதில்லை. ஆங்கிலச் சொற்களை நிறைய நிறைய கலந்து பேசுபவர்களும், ஆங்கிலத்திலேயே பேசுபவர்களுமே புத்திசாலிகள் எல்லாம் தெரிந்தவர்கள் என்பது ஒரு மாயையான அறியாமையே!
நம்மிடம் சொற்கள் இல்லாதபோது பிறமொழிச் சொற்களில் பொருட்களின் பெயரை குறிப்பிடுவதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், வலிந்து வாயில் வராதபோதும் தட்டுத்தடுமாறி பிறமொழிச்சொற்களை பெருமைக்காக பயன்படுத்துகிறோம் என்றால், நம் மொழியை நாம் அழிக்கத் தொடங்கி விட்டோம் என்றுதானே பொருள்?
தமிழைத் தம் தாய்மொழியாகக் கொண்ட மக்களில் பலர் தாமும் தங்கள் பிள்ளைகளும் தமிழில் உரையாடுவதை கௌரவக் குறைச்சலாக எண்ணும் ஒரு அபத்தம் நிகழ்கிறது. இந்த அறியாமையை முதலில் களைதல் வேண்டும். அன்றாடம் பயன்படுத்தும் சொற்களையாவது பிறமொழிக் கலப்பின்றி பேசத்தெரிதல் வேண்டும். பிள்ளைகளை ஆங்கிலவழிப் பள்ளிக்கூடங்களில் தான் படிக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் மாற்ற முனைதல் மிக அவசியம். இன்றைக்கு ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களில் பிள்ளைகள் ஓரிரு வார்த்தைகள் தாய்மொழியில் பேசிவிட்டால் தண்டமும் தண்டனையும் என்பது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. அறிவு வளர்ச்சி என்பது பிற மொழிகளைக் கற்றுக்கொள்வது மட்டுமேயல்ல. தாய்மொழியைப் பிழையின்றி பேசத்தெரிதலும் தான்.
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கான பரிந்துரைகள் :
தொழில் புரட்சி முதல் அறிவியல் புரட்சி வரை அது எந்த மொழியினரால் நடத்தப்படுகிறதோ அந்த மொழியே ஆதிக்கம் பெறுகிறது. அவ்வாறு ஆதிக்கம் பெறும் மொழி வழக்கு மொழியாக மாறி, அது பின்னர் வாழ்வியல் மொழியாக மாறுகிறது. எனவே, தமிழ் பேசலாம், கேட்கலாம், எழுதலாம், படிக்கலாம் என்ற நிலை மாறி அது வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் என்ற நிலை என்று வருகிறதோ, அன்றைக்கு தான் தமிழ் வளரும்.
தமிழர்களின் கல்வி, வேளாண்மை, வணிகம், கலை, தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல், மின்னியல், கணிதம், நீதி, வங்கித்துறை செயல்பாடுகள், அரசியல், திரைப்படத்துறை, ஊடகங்கள் என அனைத்திலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்தி, அதை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் மட்டுமே தமிழ் மென்மேலும் செழித்து வளரும்.
தமிழ் பல்கலைக்கழகம், தமிழ் படிக்கும் மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வேளாண்மை, மின்னியல், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், மேலாண்மை, சட்டம் போன்ற உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் பயன்பாட்டு மொழியாக தமிழை கொண்டுவரத் தேவையான தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும். அனைத்துத்துறைகளிலும் உள்ள பாடப் புத்தகங்களை, ஆங்கிலம் மற்றும் உலக மொழிகளில் வெளிவரும் ஆராய்ச்சி நூல்களை அந்தத் துறையைச் சேர்ந்த வல்லுநர்களோடு சேர்ந்து, அதன் செழுமை மாறாமல் தமிழ் மொழியில் மாற்றம் செய்ய வேண்டும். அதை கல்வி பயில்வதற்கான நூலாக மாற்றம் செய்து அதை அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அப்துல்கலாம் ஐயா குறிப்பிட்டிருக்கிறார்.
உலக தொடர்பு மொழியான ஆங்கிலத்தையும், தாய்மொழியான தமிழையும் அடிப்படையாக வைத்து நமது மொழியை வளர்க்க வேண்டும். முதலில் தமிழ் மொழியில் உயர்கல்வியை கற்பிக்கச் செய்து, அதன்பிறகு, ஆராய்ச்சியையும் நமது மொழியிலேயே மேற்கொள்ள வேண்டும். தமிழ் மொழியின் வாயிலாக செய்யப்பட்ட ஆராய்ச்சிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து உலக அளவில் அவற்றை கொண்டு செல்ல வேண்டும். அதை புத்தகங்களாகவும், ஆராய்ச்சி நூல்களாகவும் வெளியிடுவது அவசியம்.
தமிழ் மொழி வளர்வதற்கு உயர்கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. தொழில்நுட்பங்கள், அறிவியல், மருத்துவம் போன்ற துறைகளில் தமிழ்மொழியிலேயே ஆராய்ச்சிகளைச் செய்து தாய் மொழியிலேயே சிந்திக்கும் திறனையும், கற்பனைத் திறனையும் மேம்படுத்த வேண்டும். இதன்மூலம், நாம் உலகத் தரத்தோடு புதிய சாதனங்களை, எந்திரங்களை உற்பத்தி செய்து உலக நாடுகளோடு போட்டி போட்டு வெற்றி பெற முடியும். இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும். இதன்மூலம் தொழில் மேம்பாடு அடைவதோடு, வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுத்துப் படிக்கும் சூழல் ஏற்படுவதுடன், தாய்மொழியிலேயே படிப்பதால் தமிழும் வளரும்.
ஆட்சி அதிகாரத்திலும், சட்டம் மற்றும் நீதியிலும் தமிழ் மொழியையே முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதேசமயம் தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை கற்றுக் கொண்டு, அதை துணை ஆட்சி மொழியாக பயன்படுத்தலாம். தமிழ்நூல்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். அதேபோன்று, மற்ற மொழிகளின் நூல்கள் தமிழ்மொழியில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிட வேண்டும். இந்த திட்டங்களை முறையாக செயல்படுத்தினால் தமிழ் மொழி செழித்து வளரும்.
சமீபத்திய நாளிதழில் வெளிவந்த செய்தியின்படி சிங்கப்பூரில் குழந்தைகள் எளிமையாகத் தமிழைக் கற்றுக்கொள்வதற்கு வசதியாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதைப்போலவே இங்கும் தொடங்கி விளையாட்டாகத் தமிழார்வத்தை இன்றைய குழந்தைகளிடம் வளர்க்கலாம். நேரமின்மையும் புத்தகங்களை வாங்கிப்படிக்க அக்கறையின்மையாலும் படிக்க இயலாதவர்கள் எளிதாக வாசிக்கும் வண்ணம் இணையம் மூலம் மின்வடிவில் அல்லது செயலிகளின் வழியாக புத்தகங்களைப் பரவலாக கிடைக்கச் செய்யவேண்டும். பழைய நூல்களை மின்வடிவில் புதுப்பித்தல் மட்டுமல்லாது புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்களின் படைப்புகளும் வெளிவரச் செய்து தமிழார்வத்தை வளர்க்கவேண்டும். அப்போது மட்டுமே மொழியின் வளர்ச்சியைச் செம்மையுறச் செய்யமுடியும்.
மொழி வளர்ச்சியில் நம் கடமை :
நாம் சிந்திக்கும் முறை, நடந்து கொள்ளும் விதம், செயல்கள் இவற்றால் மட்டுமே நமது நற்பண்பும் அறிவும் ஆளுமையும் மிளிருமே தவிர, வேறு ஒரு மொழியை அம்மொழியை அறியாதவர்களிடம் பேசி தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்வதால் அல்ல. இதனால் அவர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போவதற்குத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது. நம் தாய்மொழியான தமிழ், தமிழாசிரியர்களின் மொழியாகவும் தமிழ் இயக்கங்களின் மொழியாகவும் அரசியல் கட்சிகளின் மொழியாகவும் கதை கவிதைக்கான மொழியாகவும் மட்டும் இன்று சுருக்கப்பட்டிருப்பதை ஆயிரம் பெருமைக்குரிய செம்மொழியான தமிழ்மொழியின் துயரமான காலகட்டம் என்றே குறிப்பிடலாம்.
தாய்மொழி என்பது சிந்தனை. அதுதான் எண்ணம். அதுதான்எல்லாமும். அதை மறுப்பதன் வழியாக நாம் சிந்தனையையும் எண்ணத்தையும் மறக்கிறோம் என்பதால்தான், மகாத்மா காந்தி உள்பட அனைவரும் தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்திச் சொல்கிறார்கள். பிறமொழி வழிக்கல்வியைப் பயில்பவர்கள் அம்மொழியை நன்கு பேசி எழுதி மனனம் செய்து மருத்துவராகவோ, பொறியாளராகவோ மாறி பொருள் ஈட்ட முடியுமே தவிர, கண்டுபிடிப்பாளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் உருவாவது அரிது என்பதே கல்வியாளர்களின் ஒருமித்த கருத்து. அதிகார பலமிக்கவர்களோடு எளிய மக்கள் அச்சமின்றி உரையாடக்கூடிய வலுவைத் தரக்கூடியது கல்வி. இன்றோ வருவாய் நோக்கில் நம் தூய தமிழ்மொழியின் மீது வெற்று முலாம் பூசி அதன் சிறப்பை மறைத்து விற்கப்படும் வியாபாரமாக ஆனதற்கு முக்கியப் பொறுப்பேற்க வேண்டியது அரசாங்கமே! தமிழில் கல்வி கற்றாலும் வேலைவாய்ப்புகள் ஏராளம் உண்டு என்கிற நிலையை ஏற்படுத்தி தமிழை வெறும் இலக்கிய மொழியாக மட்டும் புகழ்ந்து கொண்டிருக்காமல் வணிக மொழியாகவும் தொழில் மொழியாகவும் உயர்த்த வேண்டும். வெறும் ஆர்வம் மட்டுமே போதாது என்பதை தமிழ்ச் சமூகமே உணர்ந்து செயல்பட்டால்தான் செந்தமிழ் செழிப்புறும்.
" இனிமைத் தமிழ் மொழி எமது-எமக்
கின்பந்தரும்படி வாய்த்தல் நல் அமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு-எங்கள்
கதியில் உயர்ந்திட யாம் பெற்ற பேறு!
தனிமைச் சுவையுள்ள சொல்லை-எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங் கண்ட தில்லை
நனியுண்டு நனியுண்டு காதல்-தமிழ்
நாட்டினர் யாவர்க்குமே தமிழ் மீதில்..! "
எனப் பாரதிதாசனார் பாடியது எப்படி மெய்யன்றிப் போகும் ? தமிழர்கள் யாவருக்கும் தம் மொழியின் மீது காதலிருக்கும்.
நாம் அனைவரும் தற்போதைய நம் மொழியின்நிலை உணர்ந்து நம் தீந்தமிழ் மொழி ஆலமரம்போல் ஆழமாக வேரிட்டு அருகுபோல் அகலப்படர நம்மால் இயன்றதைச் செய்வோம் என உறுதியேற்போம்.
பாரதியைக் கூப்பிட்டு அவர் மகிழும் விதமாய் இப்போது ஒன்றுமட்டும் சொல்வோம்.
“தமிழ் இனி மெல்லத் தளிர்க்கும்.”
- விக்னேஷ் சி செல்வராஜ்
பதிவு : பிரதிலிபி - அகம் இணைந்து நடத்திய 'ஞயம் பட வரை' கட்டுரைப்போட்டிக்காக எழுதியது.
Total Pageviews
Wednesday, 13 January 2016
ஞயம் பட வரை - பிரதிலிபி கட்டுரைப்போட்டி
Saturday, 5 December 2015
காதல் பிள்ளையார்
நமக்குப் பரிமாற்றுப் பொருளாகிப்போன பிள்ளையார்களால் நிறைந்திருக்கிறது வீடு.
நாம் கதை பேசும்போதெல்லாம் அவர் சிரி்த்துக்கொண்டிருக்கிறார்.
நம் ஊடல்களின் போதெல்லாம் பிள்ளையார் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்.
' விட்டுப்போ..' என நீ கோபத்தில் கத்தியபோது ஒத்திசைவால் ஒரு பிள்ளையார் விழுந்து தும்பிக்கையின் ஒரு ஓரம் உடைபட்டுப் போனது.
எடுத்துக் கையில்வைத்து அழுது கொண்டேயிருந்தாய்.
அடுத்தடுத்த நாட்களில் கத்துவதற்கு முன்பே பிள்ளையாரை பத்திரப்படுத்தி விடுகிறேன் நான்.
நீ விலகிச் சென்றபோது பிள்ளையார் கண்ணில் ஈரமாய் இருந்ததாகப் பட்டது எனக்கு.
கண்ணீரின் வழி பார்த்தால் எல்லாம் கலங்கலாய்த் தான் தெரியும் என மனதைத் தேற்றிக் கொள்கிறேன் மறுபடியும் ..
பிள்ளையாரைக் கடக்கும்போதெல்லாம் உன்னைத் தேடுவதைப்போலவே இருக்கிறது.
சீக்கிரம் வந்திடுவா எனச்சொல்லிச் சமாளிக்கிறேன்.
குழந்தையைப் போலக் கண்ணடிக்கிறார்.
இப்படித்தான் நீ என் காதலியான பிறகு அவர் என் நண்பனாகி விட்டார்.
Friday, 4 December 2015
கண்ணீரின் காதலன் நான்
எல்லாவற்றிற்கும் அழத்தான் செய்கிறேன்
ஆண்பிள்ளை அழலாமா எனக் கேட்பவர்களையெல்லாம் அருகேயழைத்து அழவைத்துவிடுகிறேன்.
ஐ லவ் யூ சொன்னாலும் அழுகிறேன்
வெறுப்பதாகச் சொன்னாலும் மறைத்தபடி அழுகிறேன்
கட்டிக்கொண்டாலும் அழுதுதீர்த்து விடுகிறேன்
நீ இருக்கும்போதும் அழுகிறேன்.
நீயில்லாதிருக்கப்போகும் நாட்களை நினைத்தும் அழுகிறேன்
அது மட்டும் கூடவே இருக்கிறது
எல்லா இரவுகளிலும்
உன்னை விடவும்..
Thursday, 1 October 2015
கொலுசு முத்துக்கள்
* அடித்துப்பெய்த மழை அறிந்திருக்கவில்லை வேயாமல் ஒழுகும் அடுப்படிக் கூரையை..
* இந்த வாடிய கனகாம்பரம் கூட உன்னையே நினைக்கவைக்குமெனில் எந்த நம்பிக்கையில் மறக்கச் சொல்கிறாய் உன்னை..
* ஒவ்வொரு துளியிலும் உன்பெயரெழுதிய இம்மழை கரைத்துவிடத் துடிக்கிறது காலெடுக்க மனமின்றி முழுவதுமாய் மூழ்கிப் போகிறேன் நான் உன்னில் ..
* புறாக்களையெல்லாம் கொன்றொழித்துவிட்டு அதன் நிறங்களை மட்டும் எந்தச் சமாதானத்திற்காய் பயன்படுத்தப் போகிறீர் ?
* இந்தப் பின்னிரவு அள்ளித் தெளிக்கிறது மழையை கூடவே அவள் நினைவுகளையும்..
* விட்டுவிட்டுப் பெய்யும் மழை நினைவுபடுத்துகிறது நீ கையாட்டி திரும்பித் திரும்பிப் பார்த்துச் சென்றதை..
* மேகமென்றதற்கும் நிலவென்றதற்கும் ஒரே புன்னகைதான் வீசிச் சென்றாய்.. இப்போது மழையென்கிறேன் சிலதுளிகள் சிந்துகிறாய்..
* நெற்றியிலிடும் முத்தங்களைப்போல சாலைநனைத்த கோடைமழையும் அதி அழகானதே
* இறுதிவரை சில வார்த்தைகள் பயன்படவேயில்லை.. ஒருவேளை அவைகூட நம்மை இணைக்கப் பயன்பட்டிருக்கலாம்..
* ஒருசேர என்னுள் உன்னையும் உன்னுள் என்னையும் நினைவூட்டிவிடுகிறது யாரோ மீட்டிய இசை பண்பலையில்
* பரிகசித்த வெயிலையும் சேர்த்து விழுங்கி பசியாறிக்கொண்டிருக்கிறது இந்தப் பெருமழை..
* வெற்று இதயத்தில் இசை மீட்டுகிறாயே இப்படி உன் வயலின் விரல்களால்..
* சுவிஸ் வங்கித் தொடர்புள்ள இதே தேசத்தில்தான் கூரைவீட்டுக் கடவுள்களும் வாழ்கிறார்கள்.
* வழிந்த குருதியையெல்லாம் துடைந்தெறிந்துவிட்டு அடுத்த வேளைச் சோற்றுக்கு அலைபவனின் தேசத்தில் நாம் பெற்றதற்குப் பெயர் 'சுதந்திரம்'.
*நிலவில்லாத இரவுகளிலெல்லாம் கூட காதலிக்கிறேன் உன்னை மின்மினிப்பூச்சிகளின் சாட்சியாக..
* பக்கங்களையெல்லாம் புரட்ட ஒட்டிக்கொண்டிருந்தது இரு பக்கங்கள் எச்சில் எனத்தலைப்பிட்ட கவிதை தாங்கியபடி ..
* உச்சந்தலை வலிக்க குட்டிய சகோதரிகளின் பாசம் பின்னர் கைவைத்து அழுத்தி வலிக்குதா எனக்கேட்பதில் புரியும்.
* வேருக்குச் சேதியனுப்ப ஒவ்வொரு இலையாய் உதிர்க்கிறது கிளை.. கடைசி இலை சொல்லிச்சென்றது மரணச்செய்தியை..
*அந்தச் சிலவற்றை மட்டும் ஸ்மைலிகளால் கடக்கமுடிந்தால் வாழ்க்கை இன்னும் பேரழகு..
* மடித்து ஒற்றிட்டு உடைந்த வார்த்தைகளெல்லாம் அழகாய் அமர்ந்துகொண்டது கவிதையெனும் பெயரோடு..
* பேப்பரில் கோடரி வரைந்த குழந்தை ஏளனப் புன்னகை செய்தது மேசை..
* தட்டான்கள் ஹெல்மட் மாட்டியிருப்பதாகக் சொல்லிச் சிரிக்கும் குழந்தையை விட இந்த வானவில் ஒன்றும் அழகில்லை..
* மான் வரையத் தெரியாத குழந்தைக்காக புல்லைத் தின்று பசியாறிக்கொண்டது புலி ஓவியம்..
* பறந்துவிட்ட பலூனைப் பிடிப்பதற்காகவே முதல்நாள் விடுபட்ட கனவைத் தொடர முயல்கிறது குழந்தை ..
* புரண்டு படுக்கும் குழந்தைகளை யாரும் எழுப்பிவிடாதீர் கடவுளுடன் கிச்சுகிச்சு மூட்டி விளையாடியிருக்கலாம்..
* பென்சில்களை இறுகப் பற்றிக்கொண்டே தினம்தினம் உறங்குகிறாள் எங்கள் வீட்டு தேவதை..
* ஊதச் சொன்னால் புல்லாங்குழல் கடிக்கும் குழந்தைகளெல்லாம் கண்ணன் இல்லையென யார் சொன்னது ?
* ஒட்டுமொத்தப் பிரியங்களின் சாட்சியாக இன்னும் உயிர் வாழ்கிறது இந்த ஒற்றைப்புறா..
* பறந்துவிட்ட பட்டாம்பூச்சி
மறந்துவிட்ட கதைகள்
தொலைந்துவிட்ட பால்யம்
எல்லாவற்றையும் மொத்தமாய் உணர்ந்துவிட இருக்கவே இருக்கிறது
என் 'தமிழ்'..
* வார்த்தைகளைப் படுத்தி எடுத்ததையெல்லாம் பக்குவமாய் அடுக்கி தானாகவே கவிதையாக்குகிறது
என் 'தமிழ்'..
* பதில்களையெல்லாம் அடுத்த கேள்விகளாக்கித் தொடுத்துக்கொண்டே இருக்கிறாள் உறங்கும் வரை எங்கள் வீட்டு தேவதை..
* வானவில் மகளா நீ
மகிழ்ச்சி துக்கமென
நொடிக்கொருதரம் நிறம்மாறிக் கொண்டிருக்கிறாயே..
* எல்லா வருடமும் போல்தான் இன்றும்.
அவள் கடித்துக் கொடுத்த கொழுக்கட்டைச் சுவைதான் இப்போதைக்கில்லை..
* நீ பேசாத
வார்த்தைகளிலெல்லாம் கூடப்
பொதிந்திருக்கிறது
காதலெனும் பேரன்பு.
* சிதிலமடைந்த வீடுகளின்
பெயர்ந்த காரைகளைத் தவிர இப்போது மிச்சமிருப்பதெல்லாம் பழைய நினைவுகளாக இருக்கலாம் ..
* இருக்கும் கொஞ்சமே கொஞ்சம்
மரங்களும் வெட்டப்பட்டு
வீடுகளாக்கப்பட்டபின்
யானைகளை யார் வீட்டில் வளர்ப்பீர்..
* விரும்பிக் கேட்ட பொருளை
அப்பாக்கள் வாங்கி வருவதற்குள்
தேவதைகள் தூங்கிவிடுகிறார்கள்..
* ஆசான்
______________________
உன் காதோரம் ஒட்டிய
சாக்பீஸ் துகள்களுக்கெல்லாம்
தலை வணங்குகிறேன் ..
அதுதானே எனக்கு அகரம் சொல்லிக்கொடுத்தது..
* ஊரையே வாழவைக்கும்
மழைநீரில்
செத்துச் செத்துப்
பிழைக்கிறது
அட்டைப்பூச்சி..
* உலகை அழிக்கும் உங்கள்
ஆசை நிறைவேறவேனும்
பற்றி எரியச் சருகுகளையாவது
மிச்சம் வையுங்களேன் .
* அன்புள்ள எனத் தொடங்கிய
கடிதங்களையெல்லாம் தொலைத்துவிட்டு
தாங்கள் செலுத்தத்தவறிய தவணைத்தொகை
எனும் எல்ஐசி காகிதங்களையே
சுமந்து வருகிறார் போஸ்ட்மேன் தாத்தா..
* திருவிழாக் கடைகளில்
அடம்பிடித்து
வளையல், பாசி
வாங்கி அணிந்ததோடு
கரைந்தது மிச்சமிருந்த பால்யம்.
* பெரு அழுத்தத்தோடு
வந்த மழை
ஒருவேளை
முற்றத்து வீடுகளைத்
தேடியதோ என்னவோ ?
* சோளக்காட்டை அழித்துப்போட்ட
ரியல் எஸ்டேட்
மஞ்சள் கற்களை
மறைத்துச் செழிப்பாய்
வளர்கிறது சீமைக்கருவேலை.
Wednesday, 23 September 2015
நிலவின் சாட்சியாக
என்றாவது நினைவுக்கு வரட்டும்
இந்த நாளும்..
நம்மிருவர் காதலுக்கு சாட்சியாக
நிலவும் அந்த நீண்ட இரவையும்
தவிர வேறு யாருமில்லை..
விழித்துக்கொண்டே இருந்தது
அவ்வப்போது இடைவெளிவி்ட்டு
நம்மைப்போலவே
அந்தப் பி்ன்னிரவும்..
விண்மீன்களெல்லாம் உறங்கி
வெகுநேரமாகிவிட்டது..
மகிழ்ச்சியின் உறக்கமாயிருக்கலாம்..
தேடல்களெல்லாம் முடியும் வேளையில்
தான் இங்கே தொடங்கப்பட்டது..
அசைவின்றிக் கிடந்தது உதிர்ந்த
இதழ்களெல்லாம்
ஆதலினால் வியர்வைகள்
துளிர்த்திருக்கலாம்..
அர்த்தப்படாத கனவாய்க்கூட
இருக்கலாம்..
மகிழ்வு மறுநாள் தலைதுவட்டிக்
கொண்டது மட்டும் ஏனோ ?
எல்லாம் முடிந்தது
எண்ணிக் கழிந்த நாளும்
முந்நூறைத் தொட்டது..
எல்லாம் கனவாகவே கூட
தொடரலாம்..
அந்தப் பெயர் சொல்லி
யாரோ யாரையோ அழைக்க
நீ திரும்பிப் பார்த்தலில்
நான் தெரியலாம் காட்சியாக
எல்லாவற்றிற்கும் சாட்சியாக...
Tuesday, 22 September 2015
ஆசை
எனக்காக என்னடா செஞ்ச இதுவரைக்கும் என நீ கேட்கும்போதெல்லாம்
வார்த்தைகளில்தான் சமாளித்துப்
புன்னகைக்கிறேன் ஒவ்வொரு முறையும்..
உள்ளே அழுவது உனக்கும்
புரியுமென ..
அழகிய ஊர் அது...
ஊரின் நடுவில் மலைகளில்லை..
வெள்ளாடுகள் மேய்வதையெல்லாம் பார்க்கமுடியாது..
எல்லாத் திசைகளிலும் பூக்களாகவே இருக்கும் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது..
பிள்ளையார் கோயிலும்
பொல்லாக்குளமும்
நெல்லிக்காய் மரமும்
அவ்வளவு அழகு..
என நான் சொல்வதையெல்லாம் விட அழகானது கிருங்காக்கோட்டை.
ஏனெனில்
அது இந்துக்குட்டியின் ஊர்..
Thursday, 17 September 2015
சுவை
கொழுக்கட்டைத் தட்டை நீட்டி
அம்மா குடுத்துச்சு இந்தாங்க
எனச் சொல்லும் எல்லாக்
குழந்தைகளும் அவளைப்போலவே
தெரிகிறதெனக்கு..
ஆனால், நீ சாப்டு செல்லம் என்றவுடன் முதல் கடி தான் கடித்து மறுபாதியை ஊட்டிவிடும் இந்துக்குட்டியின் கொழுக்கட்டைச் சுவைதான் இப்போதைக்கில்லை..
Sunday, 13 September 2015
சாட்சி
ஒட்டுமொத்தப்
பிரியங்களின்
சாட்சியாக
அதோ இன்னும்
பறந்துகொண்டே
இருக்கிறது
ஒற்றைப் புறா
உயிர்விடவில்லை..
எப்பொழுதும்
போலவே இதுவும்
புரியாது உனக்கு..
Sunday, 30 August 2015
ஐந்தெழுத்துக்காரி
வேண்டுமென்றே கோவப்படுத்தியும்
கோவப்பட்டால் திணறத்திணறக்
கட்டியணைத்து
அன்பைப் பொழிந்தும்
ஆட்டிப்படைக்கிறாள்
இந்த 'ஐந்தெழுத்துக்காரி'..!
Wednesday, 26 August 2015
அழுத்தக்காரி..!
மகிழ்ச்சி துக்கமென அத்தனையையும்
என் மீதே தெளித்துப் பின்
நெஞ்சில் சாய்ந்து அழுத்திப்
பேசாத நேரங்களில் அடக்கிவைத்த
அவ்வளவையும் கண்ணீராகவே
பிழிந்துகொள்கிறாள்..
என் அழகான ஐந்தெழுத்துக்காரி..!
Wednesday, 19 August 2015
நீயும் நானும் ...
அடித்து வீழ்த்திவிடத்
துடிக்கிறாய்..
சுற்றிலும் மோதிப்
பின் உன்னுடல் உரசிப்
புன்னகைக்கிறேன்..
மீண்டும் உதைத்துத்
தள்ளினாலும்
கைகோர்த்துக் குழிக்குள்
இழுக்கிறேன் உன்னையும்..
நிறத்தைத் தவிர
இன்னொரு ஒற்றுமையும்
உண்டு..
இந்தக் காதலில்
வீழ்தல் 'வெற்றி' யெனக்
கொள்ளப்படும்
இருவருக்கும்..!
என்னமோ ?
வெட்டவெளியில்
வெளிச்சமின்றி
எல்லைகளற்று
எப்பொழுதாவது
உனக்குமெனக்குமான
இடைவெளியில்
ஊர்ந்து செல்கிறது..
ஊரே அதைக்
'காதலெ'ன்கிறது.
நீ என்ன சொல்கிறாய்..?
Wednesday, 15 July 2015
தேவதைக் கதை
வழக்கம்போலவே இன்றும் ஒரு கதை கேட்கிறாள்..மறந்துவிட்ட கதைகளையெல்லாம் நினைவூட்டிப் பார்க்கிறேன்..குமுதத்திலும் குங்குமத்திலும் வெளிவந்த ஒருபக்கக் கதைகளை..சிறுவர்மலர் உட்பட ஒன்றும் நினைவிலில்லை.. ராணி காமிக்ஸில் வந்த மரியாதைராமனும் முல்லாவும் மட்டும் கொஞ்சம் நினைவிருக்கிறார்கள்..முடிவு நினைவிருக்கிறது..இடையிடையே கதையில் பாதி நினைவைவிட்டுத் தப்பித்துத் தொலைந்துவிட்டது.. வேறு வழியில்லை.. மாறுகிறேன் நானே ..எழுத்தாளனாய் .. முன்பு கூட உனக்காகத்தான் கவிஞனாகவும் ஆகித் தொலைத்தேன் நினைவிருக்கிறதா ?
எப்படி மறப்பாய் ..
உன்னை அழவைப்பதற்கும் சொற்ப முத்தங்களுக்காகவும்தானே பயன்படுத்தியிருக்கிறேன் அவற்றை..
மடியில் தலைவைக்கச் சொல்லி கதை சொல்லத் தொடங்குகிறேன்.
சிங்கம் வந்தது.மருள்கிறாள்.. கூடவே ஒரு முயல் உன்னைப்போல ..சிரிக்கிறாள் சின்னதாய்.. சிலநேரங்களில் நரிகள் வரும். எப்போதாவது ட்ராகன்களும் கூட வருவதுண்டு.. ட்ராகன் பார்த்ததே இல்லடா என்கிறாள்..மலைப்பாம்பையும் கடற்குதிரையையும் சேர்த்தது மாதிரி என்கிறேன்.. அவள் உருவகப்படுத்திக்கொண்டாள். நீங்களும் உங்கள் மனதில் ட்ராகன்களை அப்படியே மாற்றிக்கொள்ளுங்களேன். இல்லையெனில் நான் பொய்யென கோபம் கொள்வாள் .அவள் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் இக்கதையைச் சொல்வாளாம் . சொல்லிச் சிரிப்பாள்.
சில இரவுகளில் கதையில் திக்கித்திணறி எப்படிப் பயணிப்பது எனத் தெரியாமல் சிங்கங்களையும் மான்களையும் கூட ஒன்றாக ஓடவிடுவேன்.சிங்கம் மானை சாப்ட்டுறாதா என அவள் கேட்கையில் தான் மான்களையெல்லாம் புலிகளாய் மாற்றிவிடுவேன்.மகிழ்ச்சியாய்க் கேட்டுக்கொண்டிருப்பாள்..சிங்கம் பசியோட இருக்கு என்றாலும் முயல வேட்டையாடப் போகுது என்றாலும் ஒரேமாதிரி 'உச்' கொட்டுவாள் ..
ஆனால் ரத்தம் தெறிக்கும் கதைகள் அவளுக்குப் பிடிப்பதேயில்லை..
பேய்க்கதைகள் சொல்லச் சொன்னாள்..ஊரிலுள்ள உரக்கேணி பற்றி ஒருமுறையும் வெள்ளையம்மா புளியமரத்தையும் பற்றிக் கதை சொல்லித்தொலைக்க அந்தப் பக்கம் போவதையே தவிர்த்துவிட்டாள்..
அதோடு அதையும் நிறுத்திக்கொண்டேன்..
தண்ணி நெறய குடி என்று சொன்னாலும் அதற்குள்ளும் ஒரு கதை கேட்பாள் .ராஜா கதை, தேவதை கதை,ஏழு மலை, ஏழுகடல் தாண்டிய சம்பவங்கள் ரொம்பவே பிடிக்குமென்பாள்..ஆனால் எனக்குத்தான் அது இன்னும் கைகூடவில்லை.. சிலநேரங்களில் அவளையே நாயகியாகவும், நான் நாயகனாகவும் எண்ணிக்கொண்டு கதை சொல்வதுண்டு.வேண்டுமென்றே அக்கதையில் கட்டிப்பிடிக்கும் காட்சிகள் வைத்துக் கமுக்கமாய்ச் சிரித்தாலும் கடைசிவரை கண்டுபிடிக்கவே தெரியாமல்தான் முழித்தபடி கேட்டுக்கொண்டிருப்பாள். பயந்துநடுங்கும்படி கதை சொன்னால் இறுக்கி அணைத்துக் கொள்வாள்.அதனாலேயே தேவையின்றியும் அந்தப்பயம் நீட்டிக்கப்படுவதுண்டு..சொல்லிக்கொண்டே இருக்கையில் பின்னாடி திரும்பி பாரு என்றால் கத்தி விடுவாள்.
சிரித்தால் கடித்து வைப்பாள்.
நீ ஒரு கதை சொல்லு என்றால் முயல் ஆமை கதை சொல்வாள் கைகளை ஆட்டியபடி..ஆனால் அவள் கதையில் முயல் மட்டுமே எப்போதும் ஜெயிக்கும்..
யானைக்கதைகளில் காது எவ்ளோ பெருசு என்பதுபோன்ற குறுக்குக் கேள்விகளும் கேட்பாள்.
முன்புபோல சுட்டிக்கதைகள் படிக்க முடிவதில்லை.
நம்பர் நடிகை விநாயக சிவன் டைப்பான கிசுகிசுக்கள் எல்லாம் அவளுக்குச் சுத்தமாய்ப் பிடிப்பதேயில்லை.
கர்ணன்,அர்ஜுனன் என ஆரம்பித்தால் கொட்டாவி விடத் தொடங்கிவிடுவாள்..
காக்கா நரிக்கதையை எத்தனைமுறை சொன்னாலும் திரும்பத் திரும்பக் கேட்பாள். பாட்டி பாவம்ல எனக் கிறுக்குத் தனமாய்க் கேள்வி கேட்பாள்.
பாட்டிகிட்ட வடையைத் திருப்பி குடுக்குற மாதிரி சீன் வைத்தால் குழந்தை போலவே கன்னத்தில் கைவைத்துக் கேட்டுக்கொண்டிருப்பாள்.
பேச்சுவாக்கில் ஒருமுறை நா செத்துப்போய்ட்டா யாருக்கிட்ட கத கேப்ப என்றவுடன் அழுதே விட்டாள்.
அது எனக்காகவா இல்லை கதைக்காகவா என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
இப்படித்தான் சிலநேரங்களில்
கதையைக் கடத்தத் தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கையிலே எண்ணம் புரிந்தோ என்னவோ அப்படியே தூங்கியும் போய் விடுகிறாள்.
அவளையே தேவதையாக்கி நான் ஒரு கதை கண்டுகொண்டிருக்கிறேன் அடுத்தமுறை சொல்வதற்கு..
இதோ..,வெள்ளை கவுனுடன் மடியில் படுத்திருக்கிறாள்...
Sunday, 7 June 2015
எது கவிதை டியர்..?
வெளிநாட்டிலிருந்து தோழி ஒருத்தி அலைபேசுகிறாள். ஹலோ ..எப்டி இருக்க ? என்ன பிஸியாய்ட்டியா ? ரொம்ப நாளாச்சு.. என்கிறேன். அதெல்லாம் இல்லடா..நல்லா இருக்கேன். நீ நல்லா இருக்கியா ? ஊருல மழையெல்லாம் பெய்யுதாடா ?. ஒரு கவித ஒன்னு சொல்லுடா ப்ளீஸ் என்கிறாள். கவிதையா ? நடந்து போய்க்கிட்ருக்கேன். ஈவ்னிங் சொல்றேன் கண்டிப்பா என்கிறேன். வேணும்னா இப்ப இருக்க அட்மாஸ்பியர் சொல்லட்டா ? என்கிறேன். சரி சொல்லுடா என்கிறாள்.
ஒரு தாத்தா அவரோட பேரன சைக்கிள்ல வச்சு ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறாரு . ரெண்டு கையையும் சீட்ல ரெண்டு பக்கமும் நல்லா பிடிச்சுக்க சொல்லிட்டு கையில ஒக்காந்துற கூடாதேனு பாத்துப்பாத்து இலேசா ஒக்காந்து பேசிட்டே ஓட்டிட்டுப் போறாரு. பேக் வெய்ட் பின்னாடி இழுக்குது .
தண்ணி ஊத்துற சத்தம்.மாடு மூச்சா போகுது. டேய் லூசு எனச் சிரிக்கிறாள்.
அப்புறம்..
அந்த வீட்டு ஹோம் தியேட்டர்ல "இப்படியே எங்கவேணா தூக்கிகிட்டுப் போ..."னு சாங் ஓடுது.. விசாலும் ஸ்ருதியும் டூயட் பாடுறாங்க..
ரெண்டுநாளக்கி முன்னாடி பேஞ்ச மழத்தண்ணி இன்னும் ரோட்டுக்கு நடுவுல பள்ளத்துல கெடக்கு. நம்மூரு ரோட்டப் பத்திதான் ஒனக்கே தெரியுமே..
கார் ஒன்னு போகுது. நல்லவேள வெலகிட்டேன்.இல்லனா தண்ணி தெறிச்சிருக்கும் .
எட்டுமணியாகப் போகுது.இப்பதான் ஒருத்தரு பால் கறக்குறாரு. பெரிய கல்லு ஒன்னு மாட்டுக்கு முன்னாடி கட்டிருக்கு.அத நாக்கால நக்குது. கன்னுக்குட்டி செத்துப்போச்சு போல.
மறுமுனை அமைதியாய் இருக்கவே, ஏய்,.கேக்குறியா என்கிறேன். ம்ம்..கேக்கறேன்டா என்கிறாள்..
நம்ம ஊர் ரோட்டோரம் புளியமரம் இருக்குல..நம்பர்லாம் போட்ருப்பாங்களே..அதுல ஏதோ குருவி கத்துற சத்தம்.அணில் ஒன்னு வேகமா மரத்த விட்டு எறங்கி ஓடுது.
அப்புறம் ...
டேய்..போதும் விக்னேஷ். இதுக்கு மேல என்ன கவிதை வேணும் ?..
I love u da stupid.how you carry on this type of centiments,emotions and bla bla ... with you ? dear. எனச்சொல்லி நிலைக்கதவில் சாய்ந்து கொள்கிறாள்.
(ஃபோனில் எப்படி கதவில் சாய்வது தெரியும் என அறிவுஜீவித்தனமாக நீ கேட்டால் did you are loved by anyone ? அன்புன்னா என்னனு தெரியுமா என ஆரம்பித்து மனசு,மண்ணு, ம**, ப்ளா ப்ளா ப்ளாவென பல பக்க வசனம் சொல்வேன் என எதிர்பார்க்கிறாயா நண்பா ? நோ..நெவர்.கொஞ்சம் தண்ணி குடி நண்பா என வேண்டுமானால் சொல்வேன்.)
நிலைக்கதவில் சாய்ந்து கொள்கிறாள்.
take care dear எனச்சொல்லி ஃபோனை வைக்கிறேன்.
யோசிக்கிறேன். still.....
எது கவிதை விக்னேஷ் ..??
எது கவிதை ..?
பழநி சரவணபவன். மதிய உணவு சாப்பிடுவதற்காகப் போய் அமர்கிறேன்.பக்கவாட்டு வட்டமேசையில் இளம் தம்பதியர் சிறு குழந்தையுடன். அளவு சாப்பாடு வருகிறது.கூடவே ஒரு தட்டு முழுக்க வட்டக்கிண்ணங்களில் சாம்பார்,ரசம்,குருமா,மோர் என..
சாப்பிடத் தொடங்குகிறார்கள்.
"சாம்பார்ல புகைவாசணை வருது" என்கிறாள் அந்தச்சகோதரி. "உன் சமையலுக்கு இது எம்புட்டோ பரவாயில்ல" எனச் சிரிக்கிறார் அவர். "வீட்டுக்கு வாங்க இருக்கு உங்களுக்கு.." எனச் செல்லமாய் அதட்டுகிறாள்.
அய்யோ க்யூட் ....
கவிதை போல அவ்வளவு அழகு. சுற்றிலும் நிகழ்கவிதை நிகழ்கையில் கவிதை தேடி எங்கு அலைந்து கொண்டிருக்கிறாய் விக்னேஷ் ? என கேஷியரின் அருகில் உள்ள பொம்மை கேட்பது எனக்கு மட்டும்தான் கேட்கிறதா ?