Total Pageviews

Sunday, 29 March 2015

எங்கே எந்தன் சங்கத் தமிழ்..?

நீதியும் நெறிகளும் தவழ்ந்த
என் தமிழ் எங்கே?
வீரமும் ஈரமும் கலந்தே
விளைந்த எந்தமிழ் எங்கே ?
முதல்நாள் போரிலும் அதற்கு
முந்தைய நாள் போரிலும்
தன் கணவனையும் தகப்பனையும்
இழந்த அந்த வீரத்தாய்
மூன்றாம் நாள் போர்முரசு கேட்க
தன் பச்சிளம் பாலகனைத்
தலைசீவி உடையிட்டு
போருக்கு அனுப்பிய அந்தப்
புறநானூற்றுத் தமிழ் எங்கே?

அதனையும் மிஞ்சிய இன்னொரு
புறநானூற்றுத் தாயொருத்தி தன்மகன்
போரிலே புறமுதுகிட்டான் எனக்கேட்டுச்
சினங்கொண்டாள்.செருக்களம்
சென்று உடல்களைப் புரட்டிப்பார்த்தாள்.
நெஞ்சில் வேல் குத்தி தன்மகன்
வீழ்ந்துகிடக்க பெருமைகொண்ட
அவள் மடியில் கிடத்தி மகிழ்ந்தாளாம்.
அந்தத் தமிழ் எங்கே?
படிப்பவர் புல்லரிக்கும் அந்தச்
சங்கத் தமிழ் எங்கே ?

பாரதியும்,அவன் தாசனும் நெஞ்சினுள்
உரமேற்றிய அந்த இடைத்தமிழ்
எங்கே?
வீறுகொண்ட நெஞ்சினாய் வா..
என்றழைத்த எம் தமிழ் எங்கே ?
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு..
என முழங்கிய தாய்த்தமிழ் எங்கே?

காற்றும்,மழையும்,வறண்ட பாலையும்,
வற்றிய கடலும்,வனமும்
கவிதையாகும் என் தமிழில்.
தாமரை மலரும்,தண்ணீர் அல்லியும்
மட்டுமா கவிதையாகும்?
காட்டரளியும்,கள்ளிச்செடியும்
கூடக் கவிதைதான் நமக்கு..!
எதுகையும் மோனையும் இயைபும்
அடுக்குத்தொடர் இரட்டைக்கிளவி
என எல்லாம் அமைந்த எம்மொழி .

இலக்கியம் என்ன ஆனது?
எங்கே எம் தமிழ்ப் புலவர்கள்.?
தமிழ் இனி மெல்லச் சாகும்..
எனப் பாரதி சொன்னது பலித்திடுமா?
இன்று தமிழ் கற்றோர் நிலை என்ன?
தூக்கிவைத்துக் கொண்டாடப்படுகிறார்களா?
உலகத்தமிழ் மாநாடு நடத்தி
தமிழ் கற்றோர் நிலை உயர்த்தப்பட்டதா ?
செம்மொழி அந்தஸ்து பெற்றது..
தமிழரின் வாழ்வு செம்மை பெற்றதா ?
இலக்கியம் படித்தோரின் வேலை
இல்லாத் திண்டாட்டத்திற்கு யார்
காரணம் ?
தமிழ்நாட்டில் தமிழ் கற்றவர் நிலை
நகைப்புக்குரியதாகிப் போனது ஏன் ?


இன்று என்னானது என் உயிர்மொழி ?
காலத்தின் கோலத்தால்
மொழிக்கலப்புற்று சிறப்பை
இழக்கிறதே ..ஏன்
இனியேனும் விழிப்புறுவோம்.
தமிழ் இனி மெல்லத் துளிர்க்கும் .

'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'

எனி வே...!ஆல் ஆர் ஃபேக்ட்.
வயிற்றுக்கு என்ன வழி?

No comments:

Post a Comment