அன்றைய பீகாரின் ராஞ்சி அருகில் உள்ள
கிராமத்தில் 1981 ல் பிறந்தவர்.
பேட்மின்டனிலும் கால்பந்திலும் ஆர்வம்
கால்பந்தில் சிறந்த கோல் கீப்பர்.
அதனாலோ என்னவோ..
கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பர்.
கிரிக்கெட்டின் மீது காதல்.
1999 களில் பீகார் உள்ளூர் கிரிக்கெட்
அணியில் விளையாட வாய்ப்புப் பெற்றார் .
வறுமையின் பிடியில் இறுகாமல்
டிக்கட் பரிசோதகராக காரக்பூரில் பணி.
சுனாமி அலை உலகையே உலுக்கிய
அதே 2004 ஆம் ஆண்டு.அதற்கு
மூன்று நாட்கள் முன்பே யாருமறியாத
இந்த அமைதிப்புயல் சர்வதேச கிரிக்கெட்டில்
காலெடுத்து வைத்தது.
வங்கதேசத்திற்கு எதிரான அப்போட்டியில்
முதல் பந்தை எதிர்கொண்ட அவரை
பெவிலியன் ரன் அவுட்டோடு அன்பாக
வரவேற்றது.
வலதுகை நடுவரிசை ஆட்டக்காரராக
ஆடத்தொடங்கினார்.
அதிரடியாய் வெடித்ததெல்லாம் தனிக்கதை.
அதற்கடுத்த டிசம்பரில் டெஸ்டில் அறிமுகம் .
அதற்கடுத்த 2006 டிசம்பரில் இருபது ஓவர்
போட்டியில் அறிமுகமானார்.
அவரது கடைசி டெஸ்டும் டிசம்பரிலே
அமைந்தது எதிர்பாரா சோகம்.
ஆஸ்திரேலியத் தொடரின் தோல்விகளோடு
90 போட்டிகளோடு ரசிகர்கள் எதிர்பார்க்காத
ஓய்வுமுடிவை அறிவித்தார்.
இவரின் மிகப்பிரத்யேகமான
'ஹெலிகாப்டர் ஷாட்' விசில் போட வைக்கும்.
ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைப்பதில்
உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர்.
தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர்.
தோல்விகளால் திணறிய இந்திய
அணிக்கு கேப்டனாக 2007ல் பொறுப்பேற்றார் .
டி20 உலகக்கோப்பையில் அதிரடி வெற்றி.
அன்றுமுதல் தொட்டதெல்லாம் வெற்றிமயம் .
28 வருடக் கனவுகளோடு உலகக்கோப்பை
வெல்லும் முனைப்புடன் ஆடி
இறுதிப்போட்டியில் அடித்த தகர்த்திட முடியாத
அந்த 91* ரன்களையும் பெவிலியன் தாண்டிய
அந்தக் கடைசி சிக்ஸரையும் மறந்திட
முடியுமா..?
கிரிக்கெட்டின் கடவுளைக் கோப்பையுடன்
சுமந்த அந்தத் தருணங்கள்.
2013 ல் 'சாம்பியன்ஸ் டிராபி' கோப்பையைக்
கைப்பற்றி மூன்றுவகையான
ICC சாம்பியன்ஷிப் கோப்பைகளையும்
வென்ற ஒரே அணி என்னும் பெருமையையும்
பெற்றது இந்தியா..
இவரது சீரிய தலைமையின்கீழ்
நாற்பது ஆண்டுகளுக்குப்பிறகு டெஸ்டில்
ஆஸ்திரேலியாவை அடித்துநொறுக்கி
'ஒயிட்வாஷ்' செய்த முதல் அணி
எனும் புகழையும் பெற்றது.
ICC ஆண்டின் சிறந்த வீரர் விருதை
2008 மற்றும் 2009 ஆண்டுகளில்
பெற்றவர்.இருமுறை இவ்விருதைப் பெற்ற
முதல்வீரர் எனும் பெயரையும்
தனதாக்கிக் கொண்டார்.
2007 ல் ராஜீவ்காந்தி கேல் ரத்னா
2009ல் மதிப்புமிக்க 'பத்மஶ்ரீ' விருதுகளையும்
பெற்றதோடு மட்டுமின்றி
கபில்தேவிற்குப் பிறகு
இரண்டாவது கிரிக்கெட் வீரராக
இந்தியப் பாதுகாப்புப்படையின்
கௌரவ 'லெப்டினன்ட் கலோனல்'
பதவியளித்தும் கௌரவித்தது அரசு.
ஃபோர்ப்ஸ் இதழ் தரவரிசையில்
உலகின் 22ஆவது மதிப்புமிக்க வீரர் எனவும்
டைம் ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்ட
உலகின் செல்வாக்கு மிகுந்த நூறு
நபர்களில் ஒருவராக 2012 ல் தேர்வு
செய்யப்பட்டார்.
இது ஒன்றும் ஒரு நள்ளிரவில் பெற்ற
வெற்றிகள் அல்ல.
இவற்றிற்குப் பின்னால் அவரின் தியாகமும்
திறமைகளும் வியக்கவைப்பவை..
எத்தனையோ போட்டிகளில் வெற்றியைப்
பெற்றுத்தந்தாலும் தாண்டவமாடியதில்லை.
அவரின் அதிகபட்ச மகிழ்ச்சி என்பது
ஒன்றுமறியாதவர் போல
ஒற்றை ஸ்டம்பை கைகளில் ஏந்திச் செல்வதே.!!
ஆறுமுறை 'தொடர்நாயகன்' விருது பெற்றவர்.
அப்படி ஒன்றும் சாதித்திராதது போல
முகத்தை வைத்துக்கொள்ளும் அந்த
வித்தையை எங்கே கற்றாரோ ?
முகத்தில் அந்த குறும்புன்னகையும்
கண்களில் அடங்காத வெறியும்
இன்னும் எத்தனை நாடுகளைப்
பந்தாடக் காத்திருக்கிறதோ ...?
இந்திய அணி லீக் போட்டிகளிலேயே
வெளியேறும் எனும் கணிப்புகளை உடைத்து
ஏழு தொடர்வெற்றிகளைப் பெற்று
தற்போது கூட ஆசையாய்ப் பெற்ற
மகளை இன்னும் நேரில் காணாமல்
தான் கொண்ட குறிக்கோளை நிறைவேற்றிட
உலகக்கோப்பையில் ஆடிவிட்டு
நாளைதான் தாய்நாடு திரும்புகிறார்.
ஒரு பந்திற்கு ஆறு ரன்கள் தேவை
என்ற நிலையிலும் ஒரு வீரன்
அதே மென்புன்னகையுடன் களத்தில்
நின்றுகொண்டிருந்தால் ஹெல்மட்டைக்
கழற்றிப் பாருங்கள்.
அது 'கேப்டன் கூல்'ஆக இருக்கலாம்.
ஆறு ஓவரில் நூறு ரன் வெற்றிக்குத் தேவையெனில்
match still alive ..?! எனக் கமெண்ட்ரி வந்தால்
அவர்தான் நம் தல MSD ..!
அவர் போகும் பாதையில் பூக்களைத்
தூவச்சொல்லவில்லை..
கற்களையாவது வீசாமலிருங்கள்..
அவர் கற்றுக்கொண்டதும் நமக்குக்
கற்றுக்கொடுத்ததும் இதைத்தான்...
வெற்றிகள் மட்டுமே வாழ்க்கையா என்ன ?
வலிகளும் சேர்ந்ததுதான்.!
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
கமான் இண்டியா..!
கமான் மிஸ்டர் கூல்...!
Total Pageviews
Friday, 27 March 2015
கமான் மிஸ்டர் கூல்..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment