Total Pageviews

Wednesday, 25 March 2015

தேவை..! மற்றுமொரு சுதந்திரம்.!

பெண்ணியம் என்பது இங்கே
என்னவாய்ப் பொருள் கொள்ளப்படுகிறது ?
 பெண்களுக்கு அந்த 33% உரிமையைப்
பெற்றுத் தருவதா ?
பெண் சுதந்திரம் பற்றி வாய்கிழிய
மேடைகளில் பேசித் திரிவதா ?
கல்வியிலும்,அரசியலிலும்
மகளிரைப் பங்குபெறச் செய்து
அவர்களைத் தாங்களாகவே
முன்னேறச் செய்வதா ?
விண்வெளிக்கு அனுப்பி
வேடிக்கை பார்ப்பதா ?

எது எப்படியாகினும் ..
இன்று இந்தப் பாரதநாட்டில்
எத்தனை சகோதரிகள் வன்புணர்வு
செய்யப்படுகிறார்கள் .?
தலைநகர் முதல் தட்டான்
பறக்கும் அடித்தட்டு கிராமம் வரை
மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும்
எத்தனை சீரழிவுகளால் நம்
சகோதரிகள் துன்பப்பட்டிருப்பார்கள்..?
'கற்பழிப்பு'  இந்த வார்த்தையை
தினசரிகளில் கண்டும் காணாமல்
எத்தனை முறை ஜஸ்ட் லைக் தட்
கடந்து சென்றிருப்பாய்..?


அன்னை தெரசாவையும்,
ஐரோம் ஷர்மிளாவையும் மட்டுமே
நாம் எத்தனை நாட்களுக்கு
போற்றிக்கொண்டே இருப்போம் ?
அரசியலுக்கு அப்பாற்பட்டு
ஈ.வெ.ரா வுக்குப் பிறகு
எத்தனை பெண்ணியவாதிகள்
பெண்ணுரிமைக்குக் குரல்
எழுப்பியிருப்பார்கள்..?
'பெண்கள் நம் கண்கள்'
எனும் சொற்றொடர் வெறும்
அடுக்குமொழி வார்த்தைப்
பிரயோகத்திற்கு மட்டுமே பயன்படல்
எவ்வளவு பெரிய அவலம்..?

பள்ளித்தேர்வுகளில் மாநில
சிறப்பிடங்கள் பெற்ற மாணவிகள்
பின்னாட்களில் சஹாராவிற்குக்
குடிபோய்விட்டார்களா என்ன ?
இல்லையெனில், அவர்களின்
திறமைகள் மழுங்கடிக்கப்பட்டு
முன்னேறவிடாமல் செய்தது எது ?
அதற்குப் பெயர்தான் 'ஆணாதிக்கமா ..?'
உலகைத் தாங்கவேண்டிய அந்தக்
கைகளைக் கட்டிப்போட்டது யார் ?
நீயாய் இருக்கும் அல்லது நானாய்
இருக்கும்.

இன்னும் எத்தனை தேவதைகளை
நாம் இழக்கக் காத்திருக்கிறோம்?
ஒரு வன்புணர்வுக் குற்றவாளி
ஊடகத்தில் வெளிப்படையாகப்
பேட்டி கொடுக்க நாம் ஏற்படுத்திய
சுதந்திரம் நம் பெண்களுக்கு ஏன்
இன்னும் வழங்கப்படவில்லை .?
அடித்துப் பறிக்கவேண்டும் என
நினைக்கிறாயா ? ஆம் எனில்,
நெரித்து ஒடிக்க மெல்லிய கழுத்தெலும்பும்
அடித்தே கொல்ல உடலமைப்பையும்
உடைய அவர்களால் எப்படிமுடியும் ?

இந்தக் கேள்விகளையெல்லாம்
நீ என்னிடம் திருப்பிக்கேட்டால்
"காஃபி ல இன்னும் கொஞ்சம்
சுகர் போடு" எனச் சொல்லிக்கொண்டே
எழுதிக்கொண்டிருக்கும் என்னால்
மட்டும் எப்படி பதில்கூற முடியும்
எனதருமை நண்பா...

No comments:

Post a Comment