Total Pageviews

Saturday, 5 December 2015

காதல் பிள்ளையார்

நமக்குப் பரிமாற்றுப் பொருளாகிப்போன பிள்ளையார்களால் நிறைந்திருக்கிறது வீடு.

நாம் கதை பேசும்போதெல்லாம் அவர் சிரி்த்துக்கொண்டிருக்கிறார்.
நம் ஊடல்களின் போதெல்லாம் பிள்ளையார் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்.
' விட்டுப்போ..' என நீ கோபத்தில் கத்தியபோது ஒத்திசைவால் ஒரு பிள்ளையார் விழுந்து தும்பிக்கையின் ஒரு ஓரம் உடைபட்டுப் போனது.
எடுத்துக் கையில்வைத்து அழுது கொண்டேயிருந்தாய்.
அடுத்தடுத்த நாட்களில் கத்துவதற்கு முன்பே பிள்ளையாரை பத்திரப்படுத்தி விடுகிறேன் நான்.
நீ விலகிச் சென்றபோது பிள்ளையார் கண்ணில் ஈரமாய் இருந்ததாகப் பட்டது எனக்கு.
கண்ணீரின் வழி பார்த்தால் எல்லாம் கலங்கலாய்த் தான் தெரியும் என மனதைத் தேற்றிக் கொள்கிறேன் மறுபடியும் ..
பிள்ளையாரைக் கடக்கும்போதெல்லாம் உன்னைத் தேடுவதைப்போலவே இருக்கிறது.
சீக்கிரம் வந்திடுவா எனச்சொல்லிச்  சமாளிக்கிறேன்.
குழந்தையைப் போலக் கண்ணடிக்கிறார்.
இப்படித்தான் நீ என் காதலியான பிறகு அவர் என் நண்பனாகி விட்டார்.


Friday, 4 December 2015

கண்ணீரின் காதலன் நான்

எல்லாவற்றிற்கும் அழத்தான் செய்கிறேன்
ஆண்பிள்ளை அழலாமா எனக் கேட்பவர்களையெல்லாம் அருகேயழைத்து அழவைத்துவிடுகிறேன்.
ஐ லவ் யூ சொன்னாலும் அழுகிறேன்
வெறுப்பதாகச் சொன்னாலும் மறைத்தபடி அழுகிறேன்
கட்டிக்கொண்டாலும் அழுதுதீர்த்து விடுகிறேன்
நீ இருக்கும்போதும் அழுகிறேன்.
நீயில்லாதிருக்கப்போகும் நாட்களை நினைத்தும் அழுகிறேன்
அது மட்டும் கூடவே இருக்கிறது
எல்லா இரவுகளிலும்
உன்னை விடவும்..