வழக்கம்போலவே இன்றும் ஒரு கதை கேட்கிறாள்..மறந்துவிட்ட கதைகளையெல்லாம் நினைவூட்டிப் பார்க்கிறேன்..குமுதத்திலும் குங்குமத்திலும் வெளிவந்த ஒருபக்கக் கதைகளை..சிறுவர்மலர் உட்பட ஒன்றும் நினைவிலில்லை.. ராணி காமிக்ஸில் வந்த மரியாதைராமனும் முல்லாவும் மட்டும் கொஞ்சம் நினைவிருக்கிறார்கள்..முடிவு நினைவிருக்கிறது..இடையிடையே கதையில் பாதி நினைவைவிட்டுத் தப்பித்துத் தொலைந்துவிட்டது.. வேறு வழியில்லை.. மாறுகிறேன் நானே ..எழுத்தாளனாய் .. முன்பு கூட உனக்காகத்தான் கவிஞனாகவும் ஆகித் தொலைத்தேன் நினைவிருக்கிறதா ?
எப்படி மறப்பாய் ..
உன்னை அழவைப்பதற்கும் சொற்ப முத்தங்களுக்காகவும்தானே பயன்படுத்தியிருக்கிறேன் அவற்றை..
மடியில் தலைவைக்கச் சொல்லி கதை சொல்லத் தொடங்குகிறேன்.
சிங்கம் வந்தது.மருள்கிறாள்.. கூடவே ஒரு முயல் உன்னைப்போல ..சிரிக்கிறாள் சின்னதாய்.. சிலநேரங்களில் நரிகள் வரும். எப்போதாவது ட்ராகன்களும் கூட வருவதுண்டு.. ட்ராகன் பார்த்ததே இல்லடா என்கிறாள்..மலைப்பாம்பையும் கடற்குதிரையையும் சேர்த்தது மாதிரி என்கிறேன்.. அவள் உருவகப்படுத்திக்கொண்டாள். நீங்களும் உங்கள் மனதில் ட்ராகன்களை அப்படியே மாற்றிக்கொள்ளுங்களேன். இல்லையெனில் நான் பொய்யென கோபம் கொள்வாள் .அவள் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் இக்கதையைச் சொல்வாளாம் . சொல்லிச் சிரிப்பாள்.
சில இரவுகளில் கதையில் திக்கித்திணறி எப்படிப் பயணிப்பது எனத் தெரியாமல் சிங்கங்களையும் மான்களையும் கூட ஒன்றாக ஓடவிடுவேன்.சிங்கம் மானை சாப்ட்டுறாதா என அவள் கேட்கையில் தான் மான்களையெல்லாம் புலிகளாய் மாற்றிவிடுவேன்.மகிழ்ச்சியாய்க் கேட்டுக்கொண்டிருப்பாள்..சிங்கம் பசியோட இருக்கு என்றாலும் முயல வேட்டையாடப் போகுது என்றாலும் ஒரேமாதிரி 'உச்' கொட்டுவாள் ..
ஆனால் ரத்தம் தெறிக்கும் கதைகள் அவளுக்குப் பிடிப்பதேயில்லை..
பேய்க்கதைகள் சொல்லச் சொன்னாள்..ஊரிலுள்ள உரக்கேணி பற்றி ஒருமுறையும் வெள்ளையம்மா புளியமரத்தையும் பற்றிக் கதை சொல்லித்தொலைக்க அந்தப் பக்கம் போவதையே தவிர்த்துவிட்டாள்..
அதோடு அதையும் நிறுத்திக்கொண்டேன்..
தண்ணி நெறய குடி என்று சொன்னாலும் அதற்குள்ளும் ஒரு கதை கேட்பாள் .ராஜா கதை, தேவதை கதை,ஏழு மலை, ஏழுகடல் தாண்டிய சம்பவங்கள் ரொம்பவே பிடிக்குமென்பாள்..ஆனால் எனக்குத்தான் அது இன்னும் கைகூடவில்லை.. சிலநேரங்களில் அவளையே நாயகியாகவும், நான் நாயகனாகவும் எண்ணிக்கொண்டு கதை சொல்வதுண்டு.வேண்டுமென்றே அக்கதையில் கட்டிப்பிடிக்கும் காட்சிகள் வைத்துக் கமுக்கமாய்ச் சிரித்தாலும் கடைசிவரை கண்டுபிடிக்கவே தெரியாமல்தான் முழித்தபடி கேட்டுக்கொண்டிருப்பாள். பயந்துநடுங்கும்படி கதை சொன்னால் இறுக்கி அணைத்துக் கொள்வாள்.அதனாலேயே தேவையின்றியும் அந்தப்பயம் நீட்டிக்கப்படுவதுண்டு..சொல்லிக்கொண்டே இருக்கையில் பின்னாடி திரும்பி பாரு என்றால் கத்தி விடுவாள்.
சிரித்தால் கடித்து வைப்பாள்.
நீ ஒரு கதை சொல்லு என்றால் முயல் ஆமை கதை சொல்வாள் கைகளை ஆட்டியபடி..ஆனால் அவள் கதையில் முயல் மட்டுமே எப்போதும் ஜெயிக்கும்..
யானைக்கதைகளில் காது எவ்ளோ பெருசு என்பதுபோன்ற குறுக்குக் கேள்விகளும் கேட்பாள்.
முன்புபோல சுட்டிக்கதைகள் படிக்க முடிவதில்லை.
நம்பர் நடிகை விநாயக சிவன் டைப்பான கிசுகிசுக்கள் எல்லாம் அவளுக்குச் சுத்தமாய்ப் பிடிப்பதேயில்லை.
கர்ணன்,அர்ஜுனன் என ஆரம்பித்தால் கொட்டாவி விடத் தொடங்கிவிடுவாள்..
காக்கா நரிக்கதையை எத்தனைமுறை சொன்னாலும் திரும்பத் திரும்பக் கேட்பாள். பாட்டி பாவம்ல எனக் கிறுக்குத் தனமாய்க் கேள்வி கேட்பாள்.
பாட்டிகிட்ட வடையைத் திருப்பி குடுக்குற மாதிரி சீன் வைத்தால் குழந்தை போலவே கன்னத்தில் கைவைத்துக் கேட்டுக்கொண்டிருப்பாள்.
பேச்சுவாக்கில் ஒருமுறை நா செத்துப்போய்ட்டா யாருக்கிட்ட கத கேப்ப என்றவுடன் அழுதே விட்டாள்.
அது எனக்காகவா இல்லை கதைக்காகவா என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
இப்படித்தான் சிலநேரங்களில்
கதையைக் கடத்தத் தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கையிலே எண்ணம் புரிந்தோ என்னவோ அப்படியே தூங்கியும் போய் விடுகிறாள்.
அவளையே தேவதையாக்கி நான் ஒரு கதை கண்டுகொண்டிருக்கிறேன் அடுத்தமுறை சொல்வதற்கு..
இதோ..,வெள்ளை கவுனுடன் மடியில் படுத்திருக்கிறாள்...
Total Pageviews
Wednesday, 15 July 2015
தேவதைக் கதை
Subscribe to:
Comments (Atom)